Friday, August 04, 2017

தும்மலின் ஒழுங்குகள்

              
     நீங்கள் தும்மினால், 'அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள், (இதைக் கேட்கும்) உங்கள் சகோதரர் அல்லது நண்பர், யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக யர்ஹமுக்கல்லாஹ் என்று சொன்னால், நீங்கள் (அவருக்காக) யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும் (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையை சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புஹாரி 6224

    இந்த ஹதீஸில் ஒருவர் தும்மும் போது நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்கிற நாகரீகத்தை நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தருகின்றார்கள்.

     பன்மையில் வாசகங்களை உபயோகிக்கும் போது வானவர்களையும் சொல்கிறார்;.
நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வேறொரு அறிவிப்பில், 'உங்களில் ஒருவர் தும்மும் போது, அல்ஹம்து லில்லாஹ் (அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) என்று சொன்னால் மலக்குகள், ரப்பில் ஆலமீன் ((அவன்) அகில உலகத்தின் இரட்சகன்) என்று கூறுவார்கள். ரப்புல் ஆலமீன் என்பதை தனது முந்தைய வாசகத்தோடு இணைத்துக் கூறினால் மலக்குகள், 'அல்லாஹ் உமக்கு அருள் புரிவானாக!' என்று கூறுவார்கள்'. (ஆதாரம் புஹாரியின் அதபுல் முஃப்ரத், தப்ரானி)
இதில் மலக்குகள் முதன் முதலில் சொல்லும் வாசகம் தும்மலுக்குப் பிறகு ஒருவர் சொல்ல வேண்டிய வார்த்தையை முழுமைப்படுத்துவதற்காக ஆகும்.
தும்மலுக்குப் பிறகு அல்ஹம்து லில்லாஹ் என்று சொல்லாதவருக்கு பிரார்த்திக்க வேண்டியதில்லை.
      
     நபி (ஸல்) அவர்களுக்கருகில் இருவர் தும்மினர். அப்போது அவர்களில் ஒருவருக்கு நபி (ஸல்) அவர்கள் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக என) மறுமொழி கூறினார்கள். இன்னொருவருக்கு மறுமொழி கூற வில்லை. அப்போது அந்த மனிதர், அல்லாஹ்வின் தூதரே! இவருக்கு மறுமொழி கூறினீர்கள். எனக்கு மறுமொழி கூறவில்லையே! என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) இவர் (தும்மியவுடன்) (அல்ஹம்துலில்லாஹ் என்று) இறைவனைப் புகழ்ந்தார். நீர் (அல்ஹம்துலில்லாஹ் என்று கூறி) இறைவனைப் புகழவில்லை. எனவே இவருக்கு மறுமொழி பகர்ந்தேன். உமக்கு மறுமொழி பகரவில்லை என்று பதிலளித்தார்கள். (புஹாரி - 6225)

மற்றொரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:

    தும்மலை அல்லாஹ் விரும்புகிறான். கொட்டாவியை வெறுக்கிறான். அந்த ஹதீஸின் தொடர்ச்சியாக, 'கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வெளிப்படுவதாகும். ஆகவே முடிந்த வரை அடக்கிக் கொள்ள வேண்டும். ஹா! என்று ஒருவர் சப்தம் செய்தால் அவரைப் பார்த்து ஷைத்தான் சிரிக்கிறான்' (புஹாரி - 6226, அஹ்மது)

    அதனால் நபி (ஸல்) கொட்டாவியை முடிந்த வரை தடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கிறார்கள். நம்மால் தடுக்க முடியாத போது வாயை கைகளால் மூடிக்கொள்ள வேண்டும்.

    முந்தைய முஸ்லிம் சமுதாயத்திலிருந்து சில உதாரணங்களை சொல்வதானால், முஆவியா (ரலி) யின் ஆட்சியின் போது கடல் பயணம் மேற்கொண்ட சில முஸ்லிம்களின் சம்பவத்தைச் சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

      படகுகள் கடல் கரையை வந்தடைந்தன. ஒரு படகில் இருந்தோர் நபி (ஸல்) அவர்களின் தோழரான அபூ அய்யூப் அல்அன்சாரி அவர்களை விருந்துக்கு அழைத்தார்கள். அவர் அழைப்பை ஏற்று வருகையும் தந்தார், அவர் மேலும் சொன்னார், 'விருந்துக்கு என்னை அழைத்தீர்கள், ஆனால் நான் நோன்பு வைத்திருக்கிறேன். இருந்தாலும் நான் இங்கே வந்திருக்கிறேன் ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன், 'ஆறு விஷயங்களில் ஒரு முஸ்லிம் தனது சகோதரனுக்கு பதிலளிக்க வேண்டும். அதில் எதையேனும் விட்டுவிட்டால் அவர் தனது சகோதரனுக்கு செய்யும் கடமையை விட்டுவிட்டார். 

அவைகளாவன:

அவரை சந்திக்கும் போது அவருக்கு ஸலாம் சொல்வது
விருந்துக்கு அழைக்கும் போது பதிலளிப்பது
தும்மும் போது அவருக்கு அருள் புரியுமாறு அல்லாஹ்வை பிரார்த்திப்பது
நோய்வாய்ப்பட்டிருப்பின் சென்று அவரை சந்திப்பது
அவர் இறக்கும் போது அவரது ஜனாஸாவின் அடக்கத்தில் கலந்து கொள்வது, ஆலோசனைகள் தேவைப்படும் போது தனது சரியான ஆலோசனையை வழங்குவது'.


Monday, September 01, 2008

நோன்பின் சிறப்புகள்

ரமலான் மாதத்தின் சிறப்புகள்

1.ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின்(சுவனத்தின்) கதவுகள் திறக்கப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும், ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹூரைரா(ரலி) : புகாரி

2.அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமலான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ அவரின் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும். லைலத்துல் கத்ர் இரவில் அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும் நன்மையை எதிர் பார்த்தவராகவும் யார் நின்று வணங்குகின்றாரோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூஹூரைரா(ரலி) : புகாரி

நோன்பின் சிறப்புகள்

நோன்பு நரகத்திலிருந்து பாதுகாக்கும் கேடயமாகும். ஆகவே நோன்பு நோற்றிருக்கும் நேரத்தில் உடலுறவு கொள்ளக்கூடாது. இன்னும் இஸ்லாத்துக்கு மாற்றமான செயல்களையும் செய்யக்கூடாது. யாராவது சண்டையிட்டால் அல்லது ஏசினால் நிச்சயமாக நான் நோன்பாளி, நான் நோன்பாளி என்று கூறட்டும். என் உயிர் எவனிடம் இருக்கின்றதோ அந்த இறைவன் மீது ஆணையாக நோன்பாளியின் வாயிலிருந்து வெளியாகும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட மிகவும் நறுமணமுள்ளதாகும் (காரணம்) தன்னுடைய உணவையும், பானத்தையும் இச்சையையும் எனக்காகவே விட்டுவிடுகிறான். நோன்பு எனக்குரியது அதற்கு நானே கூலி கொடுகின்றேன். ஒரு நன்மைக்கு பத்து மடங்கு நன்மை கொடுக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூஹூரைரா(ரலி) : புகாரி

சுவர்க்க வாசல்களில் ஒன்றுக்கு அர்ரய்யான் என்று சொல்லப்படும், மறுமை நாளில் அதில் நோன்பாளிகளைத் தவிர வேறு யாரும் நுழையமாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே என்று அழைக்கப்படும் அப்போது நோன்பாளிகள் எழுந்து அவ்வாசல் வழியாக நுழைவார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் மூடப்படும். அவர்களைத் தவிர வேறு யாரும் அவ்வாசல் வழியாக நுழையமாட்டார்கள், என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - ஸஹ்ல்(ரலி) : புகாரி

ஒவ்வொரு நன்மையான காரியத்துக்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை பரிசு வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே பரிசளிப்பேன் என்று அல்லாஹ் கூறுகிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூஹுரைரா(ரலி) : புகாரி

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது மற்றொன்று தன் இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும், என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூஹுரைரா(ரலி) : புகாரி

யார் ரமலான் மாதத்தில் நம்பிக்கையுடனும் மறுமைப் பயனை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர் அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா(ரலி) : புகாரி

நோன்பின் நோக்கம்

பசியின் கொடுமையைப் பணம் படைத்தவர்கள் உணர வேண்டுமென்பதற்காகத்தான் நோன்பு கடமையாக்கப்பட்டது என்பர் சிலர். பசியை உணர்வது தான் காரணம் என்று அல்லாஹ்வும் கூறவில்லை, அவனது தூதரும் கூறவில்லை. இது இவர்களின் கற்பனையே தவிர வேறு இல்லை.

பசியை உணர்வது தான் காரணம் என்றால் செல்வந்தர்களுக்கு மட்டும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்க வேண்டும். அன்றாடம் பசியிலேயே உழல்பவனுக்கு நோன்பு கடமையில்லை என்று அவறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

மேலும் பணக்காரர்களேயானாலும் நோன்பு நோற்காமலே பசியின் கொடுமையை உணர்ந்து தான் இருக்கின்றனர். மனிதர்கள் மட்டுமின்றி எல்லா உயிரினங்களும் பசியை உணர்ந்திருக்கின்றன எனவே இந்தக் காரணம் முற்றிலும் தவறாகும்.

உடல் ஆரோக்கியம் பேணப்படுகிறது என்பது தான் நோன்பின் நோக்கம் என்பர் வேறு சிலர் அதுவும் தவறு.

நோன்பு கடமையாக்கப்பட்டதற்குரிய காரணத்தை அல்லாஹ்வே மிகத் தெளிவாகக் கூறி விட்டான். அந்தக் காரணம் தவிர வேறு எந்தக் காரணத்திற்;;காகவும் நோன்பு கடமையாக்கப்படவில்லை. மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள வசனத்தில் நீங்கள் இறையச்சமுடையோராவதற்காக என்று இறைவன் குறிப்பிடுகிறான்.

நோன்பு நோற்பதால் இறையச்சம் ஏற்படும். ஏற்படவேண்டும் என்பது தான் அல்லாஹ் கூறுகின்ற காரணம்.

நமக்குச் சொந்தமான உணவை பகல் நேரத்தில் அல்லாஹ் கட்டளையிட்டதால் தவிர்த்து கொள்கிறோம். நமது வீட்டில் நாம் தனியாக இருக்கும் போது நமக்குப் பசி எற்படுகிறது. வீட்டில் உணவு இருக்கிறது. நாம் சாப்பிட்டால் அது யாருக்கும் தெரியப்போவது இல்லை. ஆனாலும் நாம் சாப்பிடுவதில்லை. நாம் சாப்பிடக்கூடாது என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளதால் நாம் சாப்பிடுவதில்லை. யாரும் பார்க்கா விட்டாலும் நாம் சாப்பிடுவது அல்லாஹ்வுக்குத் தெரியும். அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் நமது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருப்பதாலேயே நாம் சாப்பிடுவதில்லை. யாரும் பார்க்கவிட்டாலும் இறைவன் பார்க்கிறான் என்பதற்காக நமக்குச் சொந்தமான உணவை ஓதுக்கும் நாம் ரமலான் அல்லாத மற்ற மாதங்களிலும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று நம்ப வேண்டும்.

ஹராமான காரியங்களில் ஈடுபடும் பொழுது இறைவனுக்குப் பயந்து ஹலாலானதையே நாம் ஒதுக்கி வந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும்.

இந்த ஆன்மீகப் பயிற்சிதான் நோன்பு கடமையாக்கப்பட்டதற்கான ஒரே காரணம். இதை நபி(ஸல்) அவர்களும் விளக்கியுள்ளார்கள்.

1.ஹதீஸ்: யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு; விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ, தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை. என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூஹுரைரா(ரலி) : புகாரி, அஹமத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா

2.ஹதீஸ்: உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது யாரேனும் முட்டாள் தனமாக நடந்து கொண்டால் நான் நோன்பாளி என்று கூறிவிடுங்கள் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். - அபூஹுரைரா(ரலி) : புகாரி, திர்மிதி

புகாரியின் மற்றும் சில அறிவிப்புகளில் யாரேனும் சண்டைக்கு வந்தால் யாரேனும் திட்டினால் என்று கூறப்பட்டுள்ளது.