Monday, May 08, 2006

அமல்கள் அங்கீகரிக்கப்பட

இறைவனைப் போற்றி வணக்கங்கள் புரிகின்ற நாம் நமது நற்கிரியைகள் இறைவனால் ஏற்றுக் கொள்ளப் படத்தக்கதாக அமைத்துக் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறில்லா விடின் நாம் செய்கின்ற எந்த அமலும் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அல்லாஹ் கூறுகின்றான்:

உங்களில் எவர் செயல்களால் மிக வும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காகவே அவன் மரணத்தையும் வாழ்வையும் படைத்தான். (67 : 2).

எனவே நாம் செய்யும் காரியங்கள் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றால் முதலில் சில நிபந்தனைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். முதலில் செயல்கள் உளச் சுத்தியுடன் அல்லாஹ்வுக்காக மட்டுமே ஆற்றப்பட வேண்டும். அடுத்து அச்செயல் திருமறை, நபிவழிக்கு உட்பட்டதாக அமைந்திருக்க வேண்டும்.

இதுவே நம் அமல்கள் அங்கீகரிக்கப்பட முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. இக்லாஸ் எனும் மனத்தூய்மை நமது ஒவ்வொரு செயலையும் எண்ணங்களே வழி நடத்துகின்றது. அந்த எண்ணம் அமைவதைப் பொறுத்தே நமது செயல்கள் நல்லவையாகவும், தீயவையாகவும் மாறுகின்றன. இது குறித்து நபியவர்கள் கூறியதாக உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது.

ஒருவரது ஹிஜ்ரத் (எனும் துறத்தல்) அல்லாஹ் விற்காகவும், அவனது திருத்தூதருக்காவுமாகயிருந்தால் அவரது ஹிஜ்ரத் அல்லாஹ்விற்கும், அவனது தூத ருக்குமாகவே இருக்கும். ஒருவரது ஹிஜ்ரத் உலகைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைந்து கொள்வார். அல்லது ஒரு பெண்ணைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அவர் அவளை மணம் புரிந்து கொள்வார். எனவே ஒருவரது ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டிருக்கிறதோ அதுவாகவே அந்த ஹிஜ்ரத் அமைந்திருக்கும். (புகாரி, முஸ்லிம்)

எனவே மனத்தூய்மையும், இறையச்சமும் ஒரு முஸ்லிமுக்கு அவசியமாகும். அல்லாஹ் திருக் குர்ஆனில் கூறுகின்றான்:

(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு உண்மையான செய்திகளுடன் இவ்வேதத்தை இறக்கியருளினோம். ஆகவே மார்க்கத்திற்காக மனத்தூய்மையுடன் நீர் அல்லாஹ்வை வணங்குவீராக! மேலும் அறிந்து கொள்வீராக! தூய மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது. (39 : 2-

3). மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ அவர்தாம் அல்லாஹ்விடத் தில் நிச்சயமாகக் கண்ணியமானவர் (49 : 13)

மேலும் நபியவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் உங்களது உடலமைப்பையும், உங்களது தோற் றத்தையும் பார்க்க மாட்டான். எனினும் அவன் உங்களது உள்ளங்களையே நோக்குகின்றான். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் நன்மைகளையும், தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதி விட்டான். பிறகு அதனை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்ய வேண்டும் என (உள்ளத்தில்) நினைத்து விட்டாலே அதை அவர் செயல்படுத்தாவிட்டாலும் அவருக்காக தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செய்தும் விட்டால் அந்த ஒரு நன்மையை தன்னிடம் பத்து நன்மைகளாக, எழுநூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால் ஒருவர் ஒரு தீமை செய்யநாடி (அல்லாஹ்வையஞ்சி) அதனைச் செய்யாமல் விட்டு விட்டால் அதற்காக அவருக்கு தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்து விட்டாலோ, அதற்காக ஒரேயொரு குற்றத்தையே பதிவு செய்கிறான் (இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி)

அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியேயல்லாது தவிர வேறு எதற்காகவும் செலவு செய்யாதீர்கள் (2 : 272)

அல்லாஹ் நம் ஒவ்வொரு செயல்களையும் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான் என நினைத்து தூய எண்ணத்துடன் செயல்படுவது நபியவர்கள் இபாதத்தில் காட்டித் தந்த வழிமுறைகளாகும். அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக என்ற தூய்மையுடன் செய்யப்படாத அனைத்து நல்லமல்களும் பயனற்றுப் போய் விடும். அல்லாஹ் கூறுகின்றான்:

இன்னும் நாம் அவர்கள் (இம்மையில்) செய்த செயல்களின் பக்கம் அவற்றை (நன்மையேதும் இல்லாது) பரத்தப்பட்ட புழுதியாக ஆக்கி விடுவோம். (25 : 23)

செயல்கள் முறையாகச் செய்யப்பட வேண்டும் நாம் செய்கின்ற அமல்கள் தூய எண்ணத்துடன் அமைந்திருத்தல் எவ்வளவு முக்கியமோ அவ்வாறே அவை முறையாகவும் செய்யப்பட வேண்டும். நல்லெண்ணத்துடன் செய்கின்ற செயல் முறையற்றதாக இருந்தால் அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இதே போல முறையாகச் செய்யப்பட்டாலும், நல்லெண்ணத்துடன் செய்யப்பட வில்லையானால் அது நிராகரிக்கப்படும். நல்லெண்ணத்துடனும் முறையாகவும் செய்யப்படும் செயல் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். நல்லெண்ணம் என்பது அல்லாஹ்விற்காக மட்டும் செய்யப்படும் செயலாகும்.

முறையான செயல் என்பது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலின்படி செய்யப்பட்ட செயலாகும். இதன் அவசியத்தை கீழ்க்காணும் திருக்குர்ஆன் வசனம் வலியுறுத்துகின்றது:

எவர் (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்ப்படிகிறாரோ அவர் அல்லாஹ்விற்குக் கீழ்ப்படிகிறார்...(4 : 80). மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:

மேலும் (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ, அதை எடுத்துக் கொள்ளுங்கள். இன்னும் எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள். (59 : 7)

பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நமது உத்தரவின்றி யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும்(முஸ்லிம்).

ஆகவே ஒருவனது அனைத்து நற்கிரியைகளும் அல்லாஹ்விற்காகச் செய்கின் றோம் என்ற தூய எண்ணத்துடன் நபியவர்களின் வழிகாட்டலில் செய்யப்பட்டாலே அது அங்கீகரிக்கப்படும்.