நீங்கள் தும்மினால், 'அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள், (இதைக் கேட்கும்) உங்கள் சகோதரர் அல்லது நண்பர், யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ்
உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக யர்ஹமுக்கல்லாஹ்
என்று சொன்னால், நீங்கள் (அவருக்காக) யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும் (அல்லாஹ் உங்களுக்கு
நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையை சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா
(ரலி), நூல்: புஹாரி 6224
இந்த ஹதீஸில் ஒருவர் தும்மும் போது நாம் எவ்வாறு
நடந்து கொள்ள வேண்டும் என்கிற நாகரீகத்தை நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தருகின்றார்கள்.
பன்மையில்
வாசகங்களை உபயோகிக்கும் போது வானவர்களையும் சொல்கிறார்;.
நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு அப்பாஸ்
(ரலி) அவர்களின் வேறொரு அறிவிப்பில், 'உங்களில் ஒருவர் தும்மும் போது, அல்ஹம்து லில்லாஹ் (அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) என்று சொன்னால் மலக்குகள், ரப்பில் ஆலமீன் ((அவன்) அகில உலகத்தின் இரட்சகன்) என்று கூறுவார்கள். ரப்புல் ஆலமீன்
என்பதை தனது முந்தைய வாசகத்தோடு இணைத்துக் கூறினால் மலக்குகள், 'அல்லாஹ் உமக்கு அருள் புரிவானாக!' என்று கூறுவார்கள்'. (ஆதாரம் புஹாரியின் அதபுல் முஃப்ரத், தப்ரானி)
இதில் மலக்குகள் முதன் முதலில் சொல்லும் வாசகம்
தும்மலுக்குப் பிறகு ஒருவர் சொல்ல வேண்டிய வார்த்தையை முழுமைப்படுத்துவதற்காக ஆகும்.
தும்மலுக்குப் பிறகு அல்ஹம்து லில்லாஹ் என்று
சொல்லாதவருக்கு பிரார்த்திக்க வேண்டியதில்லை.
நபி (ஸல்) அவர்களுக்கருகில் இருவர் தும்மினர். அப்போது அவர்களில் ஒருவருக்கு
நபி (ஸல்) அவர்கள் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக என) மறுமொழி கூறினார்கள்.
இன்னொருவருக்கு மறுமொழி கூற வில்லை. அப்போது அந்த மனிதர், அல்லாஹ்வின் தூதரே! இவருக்கு மறுமொழி கூறினீர்கள். எனக்கு மறுமொழி கூறவில்லையே!
என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) இவர் (தும்மியவுடன்) (அல்ஹம்துலில்லாஹ் என்று) இறைவனைப்
புகழ்ந்தார். நீர் (அல்ஹம்துலில்லாஹ் என்று கூறி) இறைவனைப் புகழவில்லை. எனவே இவருக்கு
மறுமொழி பகர்ந்தேன். உமக்கு மறுமொழி பகரவில்லை என்று பதிலளித்தார்கள். (புஹாரி - 6225)
மற்றொரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:
தும்மலை அல்லாஹ் விரும்புகிறான். கொட்டாவியை
வெறுக்கிறான். அந்த ஹதீஸின் தொடர்ச்சியாக, 'கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வெளிப்படுவதாகும்.
ஆகவே முடிந்த வரை அடக்கிக் கொள்ள வேண்டும். ஹா! என்று ஒருவர் சப்தம் செய்தால் அவரைப்
பார்த்து ஷைத்தான் சிரிக்கிறான்' (புஹாரி - 6226, அஹ்மது)
அதனால் நபி (ஸல்) கொட்டாவியை முடிந்த வரை
தடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கிறார்கள். நம்மால் தடுக்க முடியாத போது வாயை கைகளால்
மூடிக்கொள்ள வேண்டும்.
முந்தைய முஸ்லிம் சமுதாயத்திலிருந்து சில
உதாரணங்களை சொல்வதானால், முஆவியா (ரலி) யின் ஆட்சியின் போது கடல் பயணம் மேற்கொண்ட சில முஸ்லிம்களின் சம்பவத்தைச்
சொன்னால் பொருத்தமாக இருக்கும்.
படகுகள் கடல் கரையை வந்தடைந்தன. ஒரு படகில்
இருந்தோர் நபி (ஸல்) அவர்களின் தோழரான அபூ அய்யூப் அல்அன்சாரி அவர்களை விருந்துக்கு
அழைத்தார்கள். அவர் அழைப்பை ஏற்று வருகையும் தந்தார், அவர் மேலும் சொன்னார்,
'விருந்துக்கு என்னை அழைத்தீர்கள், ஆனால் நான் நோன்பு வைத்திருக்கிறேன். இருந்தாலும் நான் இங்கே வந்திருக்கிறேன் ஏனென்றால்
நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன், 'ஆறு விஷயங்களில் ஒரு முஸ்லிம் தனது சகோதரனுக்கு
பதிலளிக்க வேண்டும். அதில் எதையேனும் விட்டுவிட்டால் அவர் தனது சகோதரனுக்கு செய்யும்
கடமையை விட்டுவிட்டார்.
அவைகளாவன:
அவரை சந்திக்கும் போது அவருக்கு ஸலாம் சொல்வது,
விருந்துக்கு அழைக்கும் போது பதிலளிப்பது,
தும்மும் போது அவருக்கு அருள் புரியுமாறு
அல்லாஹ்வை பிரார்த்திப்பது,
நோய்வாய்ப்பட்டிருப்பின் சென்று அவரை சந்திப்பது,
அவர் இறக்கும் போது அவரது ஜனாஸாவின் அடக்கத்தில் கலந்து கொள்வது, ஆலோசனைகள் தேவைப்படும் போது தனது சரியான ஆலோசனையை வழங்குவது'.