Wednesday, July 26, 2006

வுளு செய்வதின் ஒழுங்குகளும் சட்டங்களும்


வுளு செய்வதின் ஒழுங்குகளும் சட்டங்களும்

வுளு ஒரு வணக்கம் அதையும் நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த
முறைப்பிரகாரம் செய்ய வேண்டும்.
யார் இவ்வாறு (நபியவர்கள் செய்தது போல்) வுளு செய்கின்றாரோ அவர் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம்
வுளு செய்வதின் சிறப்புகள்
ஒரு முஸ்லிமான அல்லது முஃமினான அடியான் வுளு செய்து தனது முகத்தை கழுவினால் அவர் கண்ணினால் செய்த எல்லா பாவங்களும் முகத்திலிருந்து வெளியாகும் முதல் தண்ணீரோடு அல்லது கடைசி துளியோடு மன்னிக்கப்படும், தனது இரு கைகளையும் கழுவினால் இரு கைகளினால் செய்த பாவங்கள் கைகளிலிருந்து வெளியாகும் தண்ணீரொடு அல்லது கடைசி துளியோடு மன்னிக்கப்படும், தன்னுடைய இரு கால்களையும் கழுவினால் இரு கால்களினால் செய்த பாவங்கள் தண்ணீரொடு அல்லது கடைசித்துளியோடு மன்னிக்கப்பட்டு தூய்மையான மனிதராகி விடுகின்றார். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்- முஸ்லிம்
யார் நல்ல முறையில் வுளு செய்கின்றாரோ அவருடைய நகத்துக்குக்கீழால் இருந்து கூட அவருடைய உடம்பால் செய்த பாவங்கள் வெளியாகிவிடும் என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்- முஸ்லிம்
வுளு செய்யும் முறை
1- நிய்யத்து வைப்பது. (நிய்யத்து வைப்பதென்றால் மனதால் வுளு செய்வதாக நினைப்பது, வாயால் மொழிவதற்கு நிய்யத்து என்று சொல்லப் படமாட்டாது என்பதை கவனத்தில் வைக்கவும்)
அமல்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதல்லாம் எண்ணங்களை வைத்துத்தான் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் :- புகாரி, முஸ்லிம்
2-வுளு செய்யு முன் பிஸ்மி சொல்வது.
(வுளு செய்யும் போது ) யார் பிஸ்மி சொல்லவில்லயோ அவருக்கு வுளு நிறைவேறாது என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:-இப்னு மாஜா, திர்;மிதி, அபூ தாவூத்
3-மிஸ்வாக் செய்து கொள்வது.
என் உம்மத்தின் மீது கஷ்டம் இல்லையென்றிருந்தால் ஒவ்வொரு வுளுவின் போதும் மிஸ்வாக் செய்யும்படி நான் கட்டளையிட்டிருப்பேன் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் :-அஹ்மத்,திர்மிதி,அபூதாவூத்
4-இரண்டு கைகளையும் மணிக்கட்டுவரை கழுவுவது.
உத்மான் (ரலி) அவர்கள் வுளு செய்வதற்காக தண்ணீரை அழைத்து தனது இரண்டு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவினார்கள்..... என் வுளுவைப்போலதான் நபி (ஸல்) அவர்கள் வுளு செய்ய நான் பார்த்தேன் எனவும் கூறினார்கள். ஆதாரம் :- புகாரி, முஸ்லிம்
5-வாய்க்கும், நாசிக்கும் தண்ணீர் செலுத்துவது.
நபி (ஸல்) அவர்களின் வுளுவைப்போல் எங்களுக்கு கற்றுக்கொடுங்கள் என்று அப்துல்லாஹ் இப்னு ஸைத் அல்அன்ஸாரி (ரலி)அவர்களிடத்தில கேட்கப்பட்டது, அப்போது வுளு செய்வதற்காக தண்ணீர் பாத்திரத்தை அழைத்து (வுளு செய்ய ஆரம்பித்தார்கள்) பின் ஒரு அள்ளு தண்ணீரால் வாயையும் கொப்பழித்து நாசிக்கும் தண்ணீர் செலுத்தினார்கள், இப்படி மூன்று முறைசெய்தார்கள். ஆதாரம் :- புகாரி , முஸ்லிம்
நீ வுளு செய்தால் வாயை கொப்பழித்துக் கொள் என்பதாக லகீத் இப்ன் ஸுப்ரா (ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் :-அபூ தாவூத் , பைஹகி
உங்களில் ஒருவர் வுளு செய்தால் நாசிக்கு தண்ணீர் செலுத்தி பின் சீறிக்கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் :-புகாரி , முஸ்லிம்
நோன்பு இல்லாத நேரத்தில் நாசிக்கு தண்ணீர் செலுத்துவதையும் வாய் கொப்பழிப்பதையும் அதிகப்படுத்தியே செய்ய வேண்டும்.
வலது கையினால் நாசிக்கு தண்ணீர் செலுத்தி இடது கையினால் சீறி விடுவதே நபி வழியாகும்.
அலி (ரலி) அவர்கள் வுளு செய்வதற்குரிய தண்ணீரை அழைத்து (வுளு செய்தார்கள்) பின்பு நாசிக்கு தண்ணீh செலுத்தி இடது கையினால் சீறி விட்டு இதுதான் நபி (ஸல்) அவர்கள் செய்த வுளு என்றார்கள். ஆதாரம் :-அஹ்மத், நஸாயி
அலி(ரலி) அவர்கள் வுளு செய்யும் போது நாங்கள் உட்கார்ந்து அதை பார்த்துக் கொண்டிருந்தோம், வலது கையினால் வாய்க்கும் நாசிக்கும் தண்ணீர் செலுத்தினார்கள், பின்பு இடது கையினால் நாசியை சீறிவிட்டார்கள், இப்படி மூன்று முறை செய்தார்கள், யார் நபி (ஸல்) அவர்கள் செய்த வுளுவை பார்க்க விரும்புகின்றார்களோ அது இது போன்றுதான் என்று கூறியதாக அப்து கைர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ஆதாரம் :- தாரமி
6-முகத்தை கழுவுதல். (முகம் கழுவக்கூடிய அளவு, நீளத்தால் முடி முளைக்கும் இடத்திலிருந்து நாடிக்குழிவரைக்கும், அகலத்தால் ஒரு காதிலிருந்து மறு காதுவரைக்கும்)
விசுவாசங்கொண்டோரே!நீங்கள் தொழுகைக்காக தயாரானால் (அதற்கு முன்னதாக)உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரையில் உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள், (நீரைத் தொட்டு) உங்கள் தலைகளையும் தடவி (மஸ்ஹுசெய்து)க் கொள்ளுங்கள், கணுக்கால் வரையில் உங்கள் இரு பாதங்களையும் (கழுவிக் கொள்ளுங்கள்)
உத்மான்(ரலி) அவர்கள் வுளு செய்வதற்காக தண்ணீரை அழைத்து தன் முகத்தை மூன்று முறை கழுவிவிட்டு இப்படித்தான் நபி(ஸல்) அவர்களின் வுளு இருந்ததாக கூறினார்கள், ஆதாரம் :- புகாரி, முஸ்லிம்
7- தாடியை குடைந்து கழுவுவது.
நபி (ஸல்) அவர்கள் தன் தாடியை குடைந்து கழுவுவார்கள் என்பதாக உத்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம் :- புகாரி, முஸ்லிம்.
நபி (ஸல்)அவர்கள் வுளு செய்தால் தண்ணீரில் ஒரு அள்ளை எடுத்து நாடிக்கு கீழாலே நுழைத்து தன் தாடியை குடைந்து கழுகுவார்கள், என் இறைவன் எனக்கு இப்படித்தான் ஏவினான் என்பதாகவும் கூறினார்கள். ஆதாரம் :- அபூதாவூத், ஹாகிம், பைஹகி
8- இரு கைகளையும் முழங்கை உட்பட கழுகுவது.
முகத்தை கழுகுவதற்கு சொன்ன குர்ஆனுடைய வசனமே இதற்கும் ஆதாரம்.
உத்மான்(ரலி) அவர்கள் வுளு செய்வதற்காக தண்ணீரை அழைத்து தன் இரு கைகளையும் மூன்று முறை கழுவிவிட்டு இப்படித்தான் நபி(ஸல்) அவர்களின் வுளு இருந்ததாக கூறினார்கள், ஆதாரம் :- புகாரி, முஸ்லிம்
9- விரல்களை குடைந்து கழுகுவது.
நீ வுளு செய்தால் உன் இரு கால் கைகளின் விரல்களை குடைந்து கழுவிக்கொள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு கூறினார்கள். ஆதாரம் :-அஹ்மத், திர்மிதி,இப்னு மாஜா
நபி(ஸல்) அவர்கள் வுளு செய்தால் தன் இரு கால்களின் விரல்களை தன் (கையின்)சின்னி விரல்களைக் கொண்டு குடைந்து கழுகுவார்கள். ஆதாரம்:-திர்மிதி, இப்னு மாஜா, அபூதாவூத்
10-மூன்று தடவை உறுப்புக்களை கழுகுவது(தலையையும், காதையும் ஒரு தடவைதான் மஸ்ஹு செய்ய வேண்டும்)
ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து வுளுவைப்பற்றி கேட்டார் அதற்கு நபியவர்கள் மூன்று முறை (கழுவ வேன்டும்)என்றார்கள், அதை விட அதிகமாக யார் செய்கின்றாரோ அவர் எல்லைகடந்து தவறிளைத்த அனியாயக்காறராவார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் :- அஹ்மத், முஸ்லிம்
நபியவர்கள் ஒரு தடவை, இரண்டு தடவை கழுவியும் வுளு செய்திருக்கின்றார்கள், ஆனால் மூன்று தடவையே பெரும்பாலும் செய்திருக்கின்றார்கள்.
11- வலது புறத்திலிருந்து ஆரம்பிப்பது.
நீங்கள் ஆடை அணிந்தாலும், வுளு செய்தாலும் வலது புறத்திலிருந்தே ஆரம்பியுங்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:-அஹ்மத், அபூதாவூத், திர்;மிதி
12- வுளு செய்யும் உறுப்புக்களை தேய்த்துக் கழுவுவது.
உறுப்புக்களை தேய்த்து வுளு செய்து விட்டு இப்படித்தான் தேய்த்து வுளு செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் :-அஹ்மத், இப்னு ஹிப்பான், அபூ தாவூது
13- தலையையும், காதையும் மஸ்ஹு செய்வது(தடவுவது)
தலையை மஸ்ஹும் செய்யும் விஷயத்தில் பலர்கள் தவறிளைக்கின்றார்கள், அதாவது தலையின் ஒரு பகுதியை மாத்திரம் மஸ்ஹு செய்துவிடுவது, இது நபி வழியல்ல, நபியவர்கள் அப்படி செய்யவும் இல்லை, சில தடவை நபியவர்கள் தலைப்பா அணிந்திருக்கும் போது முன்நெற்றி முடியில் மஸ்ஹு செய்துவிட்டு தலைப்பாவிலும் மஸ்ஹு செய்தார்கள், தலையின் ஒரு பகுதியை மஸ்ஹு செய்வதற்கு இது ஆதாரமாக முடியாது, காரணம் நபியவர்கள் தலையில் தலைப்பா அணிந்திருந்த காரணத்தினால் தலையின் ஒரு பகுதியை மஸ்ஹு செய்து விட்டு பின்பு தலைப்பாவிற்கு மேலால் மஸ்ஹு செய்தார்கள், தலையில் தலைப்பா இல்லாமல் ஒரு பகுதியை மாத்திரம் மஸ்ஹு செய்வது நபிவழியல்ல.
ஆனால் தலைப்பா அணியாத சாதாரண நிலையில் நபி (ஸல்) அவர்கள் தலை முடி அனைத்தையும் மஸ்ஹு செய்திருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தன் இரு கையினாலும் தன் தலையை மஸ்ஹு செய்தார்கள், (அதாவது )தலையின் ஆரம்ப பகுதியிலிருந்து ஆரம்பித்து தன் பிடதி வரைக்கும் இரு கையையும் கொன்டு சென்று மீண்டும் ஆரம்பி;த்த இடத்துக்கே அவ்விரு கையையும் மீட்டினார்கள்.
ஆதாரம் :-புகாரி,முஸ்லிம்
14- இரண்டு காதுகளையும் மஸ்ஹு செய்வது, காதை மஸ்ஹு செய்வதும் ஒரு தடவைதான். (ஆழ்காட்டி விரலினால் காதின் உழ் பகுதியையும், பெருவிரலினால் வெளிப்பகுதியையும் தடவுவது)
நபி (ஸல்) அவர்கள் தன் தலையையும், இரு காதின் உள் பகுதியையும், வெளிப்பகுதியையும் மஸ்ஹு செய்தார்கள்.
இன்னும் ஒரு அறிவிப்பில் :- தலையையும், இரு காதையும் ஒரு தடவை மஸ்ஹு செய்தார்கள். ஆதாரம் :-அபூதாவூத்
15- இரண்டு கால்களையும் விரல் நுணியிலிருந்து கரண்டிக்கால் வரை கழுவுவது.
வுளுவின் ஆயத்தே இதற்கும் ஆதாரம்.
கால்களை கழுவும் போது கரண்டிக்காலை தேய்த்துக்கொள்ள வேண்டும், அதே போன்று கால் விரல்களையும் கை விரல்களால் குடைந்து கொள்ள வேண்டும்.
ஒரு பிரயாணத்திலே நபி (ஸல்) அவர்கள் எங்களை பிந்தி விட்டடார்கள், நாங்கள் அஸர் தொழுகையை பிற்ப்படுத்திய நிலையில் எங்களை நபியவர்கள் வந்தடைந்தார்கள், (பின்பு தொழுகைக்காக) நாங்கள் வுளு செய்து எங்களின் கால்களை தண்ணீரால் தடவினோம், அப்போது கணுக்கால்களுக்கு நரக வேதனைதான் என்று இரண்டு அல்லது மூன்று முறை உரத்த குரலில் நபியவர்கள் கூறினார்கள். ஆதாரம் :புகாரி , முஸ்லிம்
16- வுளு செய்யும் உறுப்புக்களை இடை நிறுத்தாமல் தொடர்ச்சியாக கழுகுவது.
17- வுளு செய்யப்படும் உறுப்புக்களை மேலே கூறப்பட்ட முறைப்படியாக (ஒன்றன் பின் ஒன்றாக) செய்வது.
18- முகம், கை, கால்களை கழுவும் போது அவசியமாக கழுவ வேண்டிய பகுதியை விட அதிகமாக்கி கழுகுவது சிறந்தது.
வுளு செய்ததின் காரணமாக என் உம்மத்தினர் நாளை மறுமையில் முகம்,கால் வெண்மை உள்ளவர்களாக எழுப்பப்படுவார்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், (இதைக்கேட்ட ) அபூ ஹுரைரா (ரலி)அவர்கள் உங்களில் எவருக்கு முக வெண்மையை நீளமாக்கிக்கொள்ள முடியுமோ அவர் அதை செய்து கொள்ளட்டும் என்பதாக கூறினார்கள்.
ஆதாரம் :-புகாரி , முஸ்லிம்
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் வுளு செய்வதற்காக தண்ணீரை அழைத்து தன் இரு கைகளையும் முழங்கையை விடவும் அதிகமாக்கி கழுவினார்கள், இரு கால்களையும் கழுவும் போது கரண்டைக்காலை விடவும் அதிகமாக்கி கெண்டைக்கால் வரையும் அதிகமாக்கி கழுவினார்கள், ஏன் இப்படிக் கழுவுகின்றீர்கள் என நான் கேட்டேன்? அதற்கு இது (மறுமையில்)ஆபரணம் அணியப்படும் இடம் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தாக அபூ ஸுர்ஆ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்:-அஹ்மத்
19- தண்ணீரில் வீண் விரயம் செய்யக்கூடாது.
நபி(ஸல்) அவர்கள் நாலு அல்லது ஐந்து முறை இரண்டு கையினால் அள்ளக்கூடிய தண்ணீர்; அளவைக்கொண்டு குளித்திருக்கின்றார்கள், இரண்டு கையினால் அள்ளக்கூடிய தண்ணீர் அளவைக்கொண்டு வுளு செய்திருக்கின்றார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம் :- முஸ்லிம்
20-ஒவ்வொரு உறுப்புக்களையும் கழுவும் போது சில குறிப்பிட்ட துஆக்கள் ஓதுவதற்கு சரியான ஆதாரமில்லை.
21-வுளு செய்த பின் ஓதுமு; துஆ.
உங்களில் ஒருவர் பரிபூரணமான முறையில் வுளு செய்துவிட்டு பின்பு
أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ الله ُوَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ وَأَشْهَدُ أنَّ مُـحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ
என்ற துஆவை ஓதினால் அவருக்காக சுவர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்பட்டு அவர் விரும்பிய வாசலால் நுழைய முடியும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:- முஸ்லிம்
யார் வுளு செய்து முடிந்ததும்

سُبْحَانَكَ اَللَّهُمَّ وَبِـحَمْدِكَ أَشْهَدُ أَنْ لاَإِلَهَ إِلاَّ أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوْبُ إِلَيِكَ

என்று ஓதுகின்றாரோ அதை ஒரு துண்டில் எழுதப்பட்டு அதில் முத்திரையிடப்படும், மறுமை நாள் வரைக்கும் அதை உடைக்கப்படமாட்டாது என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்:-தப்ராணி,அமலுல் யஃமி வல்லைலா லிஇப்னிஸ்ஸுன்னி.
நன்றி : தமிழி

Saturday, July 15, 2006

மல ஜலம் கழிக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள்

மலஜலம் கழிக்கும் முறை உட்பட உங்களின் நபி உங்களுக்கு கற்றுக்கொடுத்து விட்டார்கள் என ஸல்மான் (ரலி) அவர்களிடத்தில் யூத மதத்தை சேர்ந்த ஒருவர் கேட்ட போது, ஆம்! மல ஜலம் கழிக்கும் போது கிப்லாவை நாங்கள் முன்னோக்கக் கூடாதென்றும், வலது கையினால் சுத்தம் செய்யக்கூடாதென்றும், மூன்று கற்களுக்கு குறைந்த கற்களைக்கொண்டு சுத்தம் செய்யக்கூடாதென்றும், இன்னும் எலும்பு (மிருகங்களின்)விட்டைகளைக் கொண்டு சுத்தம் செய்யக்கூடாதென்றும் எங்கள் நபி எங்களைத் தடை செய்தார்கள் என ஸல்மான் (ரலி) அவர்கள் விடையளித்தார்கள். ஆதாரம் :- முஸ்லிம்

அன்புள்ள சகோதரர்களே? சிந்தித்துப்பாருங்கள்! மல ஜலம் கழிக்கும் முறையைக்கூட நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்திருக்கின்றார்கள் என்றால் இஸ்லாத்தில் கற்றுத்தரவேண்டிய எதையாவது நபியவர்கள் கற்றுத்தராமல் விட்டிருப்பார்களா? இல்லவே இல்லை.ஆகவே நபியவர்களின் ஒவ்வொரு சுன்னத்துக்களையும் நாம் பேணி நடக்கும் போது மல ஜலம் கழிப்பது கூட நற்கூலிக்கான ஒன்றாக கருதப்படும். நபியவர்களின் ஒவ்வொரு சுன்னத்துக்களையும் பேணி நடப்பதற்கு நம் அனைவருக்கும் அல்லாஹ் வாய்ப்பளிப்பானாக.மல ஜலம் கழிக்கும் முறைகள் பின்வருமாறு

1- கிப்லாவை முன்னோக்கியோ பின்னோக்கியோ மல ஜலம் கழிக்கக்கூடாது.
நீங்கள் மல ஜலம் கழிக்கும் போது கிப்லாவை முன்னோக்கவும் வேண்டாம், பின்னோக்கவும் வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஆதாரம்- நஸாயி

2-கட்டடத்திற்குள் கிப்பலாவை முன்னோக்கி, பின்னோக்கி மல ஜலம் கழிப்பதில் தவறில்லை.ஒரு நாள் ஹஃப்ஸா (ரலி)அவர்களின் வீட்டிற்கு மேல் நான் ஏறினேன், அப்போது நபி(ஸல்) அவர்கள் ஷாம் தேசத்தை முன்னோக்கியும் கிப்லாவை பின்னோக்கியும் மல ஜலம் கழிப்பதை நான் பார்த்தேன் என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்- திர்மிதி

3-மல ஜல கூடத்திற்குள் நுளையும் போது இடது காலை முன் வைத்து பின் வரும் துஆவை ஓத வேண்டும்.

اَللَّهُمَّ إِنِّـيْ أَعُوْذُ بِكَ مِنَ الْـخُبْثِ وَالْـخَبَائِث

அல்லாஹும்ம இன்னி அஊது பி(க்)க மினல் குபுஸி வல் கபாயிஸி
பொருள் - இறைவா! ஆண் பெண் ஷைத்தான்களின் தீங்குகளை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

4- கட்டடமில்லாத வெளி இடங்களில் மல ஜலம் கழிக்கும் போது மற்றவர்கள் பார்க்காத அளவுக்கு தூரமாகிக் கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் மலம் கழிக்கச் சென்றால் மற்ற யாரும் அவர்களை பார்க்காத அளவுக்கு (தூரமாக)செல்வார்கள். ஆதாரம்- அபூதாவூத்
நபியவர்கள் மல ஜலம் கழிக்க விரும்பினால் பூமியை நெருங்கும் வரைக்கும் தன் ஆடையை உயர்த்தமாட்டார்கள். ஆதாரம்; -திர்மிதி,அபூதாவூத்

5- வலது கரத்தால் சுத்தம் செய்யக்கூடாது

உங்களில் ஒருவர் மல ஜலம் கழிக்க நுழைந்தால் தன் ஆண் உறுப்பை தன் வலது கையினால் தொடக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஆதாரம் - அபூதாவூத், நஸாயி

6- கற்களைக் கொண்டும் சுத்தம் செய்யலாம். ஆனால் தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்வதே சிறந்தது.உங்களில் ஒருவர் மல ஜலம் கழிக்கச் சென்றால் சுத்தம் செய்யக்கூடிய மூன்று கற்களைக் எடுத்துச் செல்லட்டும,; அது சுத்தம் செய்வதற்குப் போதுமானது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்-அபூதாவூத்
தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்த குபா வாசிகளை அல்லாஹ் புகழ்ந்து கூறுகிறான்.
பரிசுத்தமாக இருப்பதயே விரும்பும் (சிறந்த) மனிதர்கள் அதில் இருக்கின்றனர், அல்லாஹ்வும் (இத்தகைய) பரிசுத்தமாக இருப்போரை நேசிக்கின்றான். (9-108)
நபி (ஸல்) அவர்கள் கழிப்பறைக்குள் நுழைந்தால் நானும் என்னைப் போன்ற ஒரு சிறுவரும் நபியவர்களுக்கு தண்ணீர் பாத்திரத்தை சுமர்ந்து செல்வோம். நபியவர்கள் அதைக் கொண்டு சுத்தம் செய்வார்கள். ஆதாரம்-நஸாயி

7- மூன்று கற்களை விட குறைந்த கற்களைக் கொண்டும் சுத்தம் செய்யலாம்.
நபி (ஸல்) அவர்கள் மல ஜலம் கழிப்பதற்கு செல்லும்போது மூன்று கற்களைக் கொண்டு வரும்படி என்னிடம் கூறினார்கள், நான் இரண்டு கற்களையும் ஒரு விட்டயையும் கொண்டு வந்தேன,; இரண்டு கற்களையும் எடுத்துக் கொண்டு விட்டயை(பார்த்து இது)அசுத்தமானதென்று வீசிவிட்டார்கள் என அபூ உபைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்-திர்;மிதி

8- உட்கார்ந்து கொண்டு மல ஜலம் கழிக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டு சிறு நீர் கழித்ததாக யாராவது உங்களுக்கு கூறினால் அதை நீங்கள் நம்ப வேண்டாம், நபியவர்கள் உட்கார்ந்து கொண்டுதான் சிறுநீர் கழித்திருக்கிறார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம் -நஸாயி

9-நிர்ப்பந்தமான சூழ்நிலைகளில் நின்று கொண்டு சிறுநீர் கழிக்கலாம்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்தாரின் குப்பை மேட்டுக்கு வந்து அதன் மீது நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள். ஆதாரம் -திர்;மிதி, அபூதாவூத்

10- மனிதர்கள் களைப்பாறும் இடம், நடை பாதை, மர நிழல் போன்ற இடங்களில் மல ஜலம் கழிக்கக்கூடாது.
மனிதர்கள் களைப்பாறும் இடம், நடை பாதை, நிழல்(போன்ற) இம் மூன்று இடங்களில் மல ஜலம் கழித்து (அதனால் மக்களின்) சாபத்தை பெறுவதை தவிர்ந்து கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்-அபூதாவூத்

11-குளிப்பறையில் சிறுநீர் கழிக்கக்கூடாது.
குளிக்கக்கூடிய குளிப்பறையில் உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஆதாரம்- அபூதாவூத்

வுளு செய்யக்கூடிய குளிப்பறையில் உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கக்கூடாது, காரணம் அதன் மூலமாகத்தான் அதிகமான வஸ்வாஸ் (சந்தேகங்கள்) ஏற்படுகின்றன என நபி (ஸல்) கூறினார்கள். ஆதாரம்-அஹ்மத்

12- தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறு நீர் கழிக்கக்கூடாது.
வுளு செய்யக்கூடிய, அல்லது குழிக்கக்கூடிய தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறு நீர் கழிக்கக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். ஆதாரம்-நஸாயி

13-மல ஜலம் கழித்த பின் கையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் மல ஜலம் கழித்து (சுத்தம் செய்த) பின் மண்ணில் தன் கையை தேய்த்து (சுத்தம்செய்தார்கள்) ஆதாரம்-நஸாயி

14- சிறு நீர் கழிக்கும் போது ஸலாம் சொல்லப்பட்டால் அதற்கு விடையளிக்கக்கூடாது.
நபி (ஸல்) அவர்கள் சிறு நீர் கழித்துக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு பக்கத்தில் சென்று கொண்டிருந்த ஒரு மனிதர் நபியவர்களுக்கு ஸலாம் கூறினார், அதற்கு நபியவர்கள் விடையளிக்கவில்லை. ஆதாரம்-நஸாயி

15- சிறு நீர் கழித்து சுத்தம் செய்யாததினால் கிடைக்கும் தண்டனை.
நபி (ஸல்) அவர்கள் இரண்டு கப்ருக்கு பக்கத்தில் சென்று கொண்டிருக்கும் போது அவ்விரு கப்ருகளிலுள்ளவர்களும் வேதனை செய்யப்படுகின்றார்கள், (ஆனால்)பெரும் விஷயத்தில் அவ்விருவரும் வேதனை செய்யப்படவில்லை, அதில் ஒருவர் சிறு நீர் கழித்தால் சுத்தம் செய்ய மாட்டார், மற்றவர் கோள்செல்லித் திரிபவராக இருந்தார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் -நஸாயி

16-கழிப்பறையிலிருந்து வெளியாகும் போது வலது காலை முன்வைத்து பின் வரும் துஆவை ஓத வேண்டும்.

غُفْرَانَكَ

குஃப்ரான(க்)கஆதாரம்:-திர்மிதி
பொருள் :- உன்னிடம் பாவ மன்னிப்புத் தேடுகிறேன்.

Saturday, July 08, 2006

பள்ளிவாசலில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்

பள்ளிவாயில்கள் அல்லாஹ்வுக்கே உரியன
அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன. எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள். (72:18)
ஒருவர் அல்லாஹ்வுக்காக வணங்குமிடம் ஒன்றை உருவாக்கினால் அவருக்காக சொர்க்கத்தில் அது போன்றதை (வீட்டை) உருவாக்குகிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி, முஸ்லிம், அஹ்மத்: உஸ்மான்(ரலி)

பள்ளிக்கு வரும்போது அமைதியைக் கடைபிடித்தல்
நீங்கள் இகாமத்தை செவியுற்றால் தொழுகைக்காக நடந்து வாருங்கள்;. (அப்போது) அமைதியையும், கண்ணியத்தையும் கடைபிடியுங்கள். வேகமாக ஓடி வராதீர்கள். (ஜமாஅத்தில்) உங்களுக்கு கிடைத்ததை தொழுங்கள், உங்களுக்குத் தவறியதை நிறைவேற்றுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி, முஸ்லிம், இப்னுமாஜா, நஸாயி, அபூதாவூத்: அபூஹூரைரா(ரலி)
அல்லாஹ் தவறுகளை மன்னித்து, அந்தஸ்த்துகளை உயர்த்துகின்ற காரியத்தை அறிவிக்கட்டுமா? கஷ்டமான நேரத்தில் முழுமையாக ஒளு செய்து பள்ளிக்கு அதிகமாக நடந்து வருவது, (ஒரு) தொழுகைக்கு பிறகு மறு தொழுகையை எதிர்பார்ப்பது என்று கூறிவிட்டு இதுதான் மாபெரும் போராட்டம் என மும்முறை நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். முஅத்தா, முஸ்லிம், திர்மிதி: அபுஹூரைரா(ரலி)

பள்ளியில் நுழையும் போது
உங்களில் ஒருவர் பள்ளியில் நுழையும்போது 'அல்லாஹூம் மஃப்தஹ்லி அப்வாப ரஹ்மதிக்க' (பொருள்: இறைவா! உனது அருள் வாயில்களை எனக்கு திறப்பாயாக!) என்று கூறட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம்: அபூஎஸைத்(ரலி)
பள்ளியில் நுழையும் போது வலது காலை வைத்து நுழைய வேண்டும். இடது காலை வைத்து வெளியேற வேண்டும். புகாரி : இப்னு உமர்(ரலி)

பள்ளியில் நுழைந்ததும்
உங்களில் எவரேனும் பள்ளிவாயிலுக்கு சென்றால் இரண்டு ரக்அத்கள் தொழாமல் உட்கார வேண்டாம். புகாரி, முஸ்லிம், அஹமத், நஸாயி: ஆபூகதாதா(ரலி)

தொழுகைக்காக காத்திருப்பவரின் சிறப்பு
தொழுத இடத்திலேயே ஒளூ முறியாத நிலையில் அடுத்த தொழுகைக்காகக் காத்திருப்பவருக்கு யாஅல்லாஹ்! இவரை நீ மன்னிப்பாயாக! இவருக்கு நீ அருள்புரிவாயாக! என மலக்குகள் பிராத்திக்கின்றனர். புகாரி, முஅத்தா: அபூஹூரைரா (ரலி)

பள்ளிக்கு துர்வாடையுடன் வரக்கூடாது
வெங்காயம், பூண்டு ஆகியவற்றை ஒருவர் சாப்பிட்டால் நமது பள்ளிக்கு வரவேண்டாம். ஏனெனில் மனிதர்கள் துன்புறும் அனைத்தின் மூலமும் மலக்குகள் துன்புறுகிறார்கள். புகாரி, முஸ்லிம்: ஜாபிர்(ரலி)

ஒரே இடத்தை நிரந்தரமாக்கக் கூடாது
ஒட்டகம் வழக்கமாக்கிக் கொள்வது போல் பள்ளியில் (தான் தொழுவதற்கென) எந்த ஒரு இடத்தையும் நிரந்தரமாக்கிக் கொள்வதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். அஹ்மத்: அப்துர் ரஹ்மான் பின் ஷிஃப்லி(ரலி)

பாங்கு கூறிய பின் காரணமின்றி வெளியேறுவது
பாங்கு கூறப்பட்ட பின் நயவஞ்சகர்களைத் தவிர வேறு யாரும் (பள்ளியை விட்டு) வெளியேற வேண்டாம், திரும்ப வருபவரைத் தவிர. முஅத்தா: ஸயீத் பின் முஸய்யப்(ரலி)

சத்தத்தை உயர்த்துதல்
நான் மஸ்ஜிதில் நின்று கொண்டிருந்தேன், என்னை ஒருவர் பிடித்தார் (நான் திரும்பியபோது) உமர் (ரலி) அவர்களைப் பார்த்தேன். நீர் போய் அ(ங்கு பேசிக் கொண்டிருந்த)வ் விருவரையும் அழைத்துவாரும் என்று அவர்கள் கூற நான் அவர்களை அழைத்து வந்தேன் (அவர்களை) நீங்கள் இருவரும் யார்? எங்கிருந்து வருகிறீர்கள் எனக்கேட்டார்கள். அவர்கள் தாயிஃபிலிருந்து வருகிறோம் என்றனர், நீங்கள் இருவரும் இவ்வூர்வாசிகளாக இருந்திருந்தால் நபி(ஸல்) அவர்களின் பள்ளியில் பேசியதற்காக உங்களை தண்டித்திருப்பேன் என்று உமர்(ரலி)அவர்கள் கூறினார்கள். புகாரி: ஸாயிப் இப்னு யஸீத்(ரலி)

பள்ளியின் சுத்தம்
பள்ளியில் துப்புவது தவறாகும், அதற்கு பரிகாரம் அதை போக்குவதாகும். முஸ்லிம்: அனஸ்(ரலி)

பள்ளியில் இழந்த (தொலைந்த) பொருளைத் தேடுதல்
எவரேனும் பள்ளியில் காணமல் போனதைத் (சத்தமாக) தேடக் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் உனக்கு திருப்பித் தராமல் இருப்பானாக! பள்ளிகள் இதற்காகக் கட்டப்படவில்லை எனக் கூறட்டும். முஸ்லிம்: ஆபூஹூரைரா(ரலி)

பள்ளியில் வியாபாரம்
பள்ளியில் (பொருள்) விற்பவரையோ, வாங்குபவரையோ நீங்கள் கண்டால் (அவரிடம்) உனது வியாபாரத்தில் அல்லாஹ் வெற்றியைத் தராமல் போகட்டும் எனக் கூறுங்கள். திர்மிதி: ஆபூஹூரைரா(ரலி)

ஜூம்மா உரையின் போது அமரும் முறை
இமாம் ஜூம்ஆ உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது முழங்காலைக் கட்டிக்கொண்டு அமர்வதை நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். முஸ்லிம்: ஜாபிர்(ரலி)
இமாம் ஜூம்ஆ உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது உன் அருகில் இருப்பவனை நோக்கி பேசாமல் இரு என்று நீ கூறினாலும் நீயும் வீணான காரியத்தில் ஈடுப்பட்டவனாவாய். (ஜூம்மாவின் பலன் கிடைக்காமல் போய்விடும்) முஸ்லிம்: அபூஹூரைரா(ரலி)

பள்ளியில் கவிதைப் பாடுதல்
பள்ளியில் கவிதை பாடுவதை நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள். அபூதாவூத்: அம்ர் பின் ஷூஐப்(ரலி)

பள்ளியில் உறங்குதல்
நபி(ஸல்) அவர்கள் ஒரு காலின் மீது மற்றொரு காலைப் போட்டுக் கொண்டு மல்லாந்து உறங்குவதை நான் கண்டேன். திர்மிதி: அப்துல்லா பின் ஜைது பின் ஆஸிம்(ரலி)
நாங்கள் வாலிபர்களாக இருக்கும் போது நபி(ஸல்) அவர்கள் காலத்தில் பள்ளியில் பேசிக் கொண்டிருப்போம், உறங்குவோம். அஹ்மத்: இப்னு உமர்(ரலி)
பள்ளியில் கைதிகளை கட்டி வைக்கலாமா? பள்ளிக்குள் முஸ்லிமல்லாதோர் வரலாமா?
நஜ்து பிரதேசத்தை நோக்கி சிறிய குதிரைப் படை ஒன்றை நபி(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் பனூ ஹனீஃபா என்ற கூட்டத்தை சேர்ந்த ஸூமாமா பின் அஸால் என்பவரை பிடித்து வந்து பள்ளிவாயிலில் உள்ள ஒரு தூணில் கட்டிவைத்தார்கள்... நபி(ஸல்) அவர்கள் ஸூமாமாவை அவிழ்த்து விடுங்கள் என்றார்கள். அவர் பள்ளிக்கு அருகில் இருந்த குட்டைக்குச் சென்று குளித்தார்கள். பின்னர் பள்ளிக்கு வந்து வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மது(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன் என்று கூறினார். புகாரி: அபூஹூரைரா(ரலி) (ஹதிஸின் சுருக்கம்)


பள்ளியில் கூடாரம் அமைத்து நோயாளியை தங்க வைத்தல்
அகழ் போரின் போது ஸஃது பின் முஆத்(ரலி) அவர்கள் கை நரம்பில் தாக்கப்பட்டார்கள். அவரை அருகிலிருந்து நோய் விசாரிப்பதற்கேற்ப பள்ளியிலேயே அவருக்காக கூடாரம் ஒன்றை நபி(ஸல்)அவர்கள் ஏற்படுத்தினார்கள். (ஹதீஸ் சுருக்கம் ) புகாரி: ஆயிஷா(ரலி)

பள்ளியில் உண்ணுதல் பருகுதல்
பள்ளியில் உண்ணலாம், பருகலாம். இப்னுமாஜா: அப்துல்லா பின் ஹாரிஸ்(ரலி)

பெண்கள் பள்ளிக்கு வந்துத் தொழுதல்
அல்லாஹ்வின் பள்ளிவாயிலில் (தொழக்கூடாது என) அல்லாஹ்வின் அடிமைகளான பெண்களை தடை செய்யாதீர்கள். அஹ்மத், அபூதாவூத்: அபூஹூரைரா(ரலி)

பள்ளிக்கு வரும் பெண்கள், கணவன் - பெற்றோர் அனுமதி பெற வேண்டும்
பெண்கள் பள்ளிக்கு வர உங்களிடம் அனுமதி கோரினால் பள்ளிக்கு வருவதை நீங்கள் தடை செய்யாதீர்கள் என நபி(ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன். முஸ்லிம்: இப்னு உமர்(ரலி)

பெண்கள் பள்ளிக்கு நறுமணம் பூசிக் கொண்டு வரக்கூடாது
(பெண்களே!) உங்களில் எவரும் பள்ளிக்கு வந்தால் நறுமணம் பூசவேண்டாம். முஸ்லிம்: ஜைனப் (ரலி)

பள்ளியை விட்டும் வெளியேறும் போது
அல்லாஹூம்ம இன்னீ அஸ்அலுக்க மின் ஃபழ்லிக்க (இறைவா! உன் அருளை உன்னிடம் கேட்கிறேன்) என கூறட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம்: அபூ உஸைத் (ரலி)

வீணடிப்பவைகள் பத்து

1. அறிவு : அதனைச் செயல்படுத்தாமல் வீணடிக்கின்றோம

2. செயல்கள் : நேர்மையான முறையில் செயல்படுத்தாமல் வீணடிக்கின்றோம்

3. செல்வங்கள் : நன்மையைப் பெற்றுத் தராத ஒன்றிற்காக வீணடிக்கின்றோம், நம்முடைய பணம், அந்தஸ்து, அதிகாரம் போன்றவற்றை இந்த உலகத்திலும், மறுமையிலும் நன்மையைப் பெற்றுத் தராத ஒன்றிற்காக வீணடிக்கின்றோம்

4. இதயம் : அல்லாஹ்வின் மீது அன்பு இன்றி அது வீணடிக்கப்படுகின்றது, அவனைச் சந்திப்பதை விட்டு விட்டு மிக நீண்ட நாள் வாழ ஆசைப்படுகின்றது. இன்னும் இங்கு அமைதி, திருப்தியை உணர்வது. அதனுடைய இடத்தில் ஏதோ சிலவற்றினால் அல்லது யாரோ ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது.

5. உடல்கள் : அதனை இபாதத்திற்காக பயன்படுத்தாமல் வீணடிக்கின்றோம், இன்னும் அல்லாஹ்விற்குச் சேவையாற்றாமலும்.

6. அன்பு : நம்முடைய கிளர்ந்தெழக் கூடிய அன்பு வழிகெடுக்கப்பட்டிருக்கின்றது, அல்லாஹ்வை நோக்கி அல்ல, ஏதோ ஒன்றை நோக்கி அல்லது யாரோ ஒருவருக்காக.

7. நேரங்கள் : சரியான முறையில் உபயோகப்படுத்தப்படாமல் வீணடிக்கப்பட்டிருக்கின்றது, கடந்தவற்றை ஈடு செய்வதற்கு, செய்யாமல் விட்ட நன்மைகளை ஈடுசெய்யாமல் வீணடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

8. பேச்சு : பயனற்ற வகையில் வீணடித்துக் கொண்டிருக்கின்றோம், அது சமூகத்திற்கும், தனிப்பட்ட மனிதருக்கும் தீங்கிழைக்கின்றது, அறிவுரையாகவோ அல்லது எழுச்சியை உண்டுபண்ணுவதாகவோ அது இல்லை.

9. சேவை : அல்லாஹ்விற்கு மிக நெருக்கமாக்கி வைக்கக் கூடிய சேவையை ஒருவர் செய்யாமல் அல்லது இந்த உலகத்திற்கு பிரயோஜனமானதொன்றைச் செய்யாமல், வீணடிக்கப்படுகின்றது.

10. இறைநினைவு : அதனால் நமக்கு எந்தவித தாக்கங்களும் ஏற்படாமல், வீணடிக்கப்படுகின்றது அல்லது நம்முடைய இதயத்திலும் எந்தவித மாற்றங்களும் ஏற்படாமல், வீணடிக்கப்படுகின்றது.

ஒழுக்கமே உயர்வைத் தரும்

ஒழுக்கம் என்பதை ஒரு முஸ்லிம் தன் கலாச்சாரத்தோடு சேர்த்து வைக்க வேண்டிய விஷயமாகும். மறுமையை நம்பக்கூடிய முஸ்லிம் நன்மை தீமை கணக்கிடப்படும் என நம்பக்கூடிய ஒரு மனிதன் இறைவிசுவாசி அதை கண்டிப்பாக பேணவேண்டும் ஏனெனில்
(மக்களை) அதிகமாக சொர்க்கத்தில் புகுத்துவது இறையச்சமும் நற்குணமும் தாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ.
இறையச்சமும் நற்குணமும் இரு சகோதரர்களாகும் இரண்டும் இணைபிரியாத தண்டவளாங்கள் ஏனென்றால் இறையச்சம் இருக்கின்ற மனிதனிடம் ஒழுக்கக் கேடுகள் இருக்காது ஒழுக்கக்கேடு உள்ள மனிதன் இறை விசுவாசியாக இருக்கமாட்டார். இதை இஸ்லாம் இவ்வாறு கூறுகின்றது
''உலோபித்தனமும், தீயகுணமும் ஓர் இறைநம்பிக்கையாளனிடம் ஒன்று சேராது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறனார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ.
உலோபித்தனமாக இஸ்லாம் கருதக்கூடிய விஷயம் என்னவெனில் ஜகாத் என்பதாகும் ஏழை மனிதர்களுக்கு உதவ வேண்டி அல்லாஹ் சில மனிதர்களை தேர்ந்தெடுத்து பணத்தைக் கொடுத்து அல்லாஹ் சோதிக்கின்றான். நாம் கொடுத்த இந்த பணத்தை ஏழைகளூக்கு கொடுக்கின்றானா அல்லது சேர்த்து வைத்து பேசாமல் இருந்து விடுகின்றானா என்று சோதிக்கின்றான் இதை அல்லாஹ் கூறும்பொழுது உங்களுக்கு நாம் அளித்ததிலிருந்து தான தர்மம் செய்யுங்கள்( )
என்றுதான் குறிப்பிடுகின்றான் இல்லையில்லை இவையெல்லாம் நானாக சம்பாதித்தவை என் முயற்சியின் பலனால் கிடைத்த வெற்றி என்று யாராவது முனுமுனுத்தால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் இவ்வாறு தாக்கீக் கூறுகின்றார்கள்
''நீங்கள் உங்கள் சொத்துக்களால் மக்களைக் கவர முடியாது. மாறாக, உங்களுடைய மலர்ந்த முகம் மற்றும் நற்குணத்தால் தான் (அவர்களைக்) கவர முடியும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்
இது தான் பணத்திற்கும் பணத்திற்கு பின்னால் போகும் பிணத்திற்கும் (மனிதர்களுக்கும்) இஸ்லாம் கொடுக்கும் வெகுமதி.
இது நல்லது அல்லது கெட்டது என்று எப்படி ஒரு மனிதன் முடிவு செய்வது அதையும் இஸ்லாம் கற்றுத்தருகின்றது. ஏனென்றால் புகைபிடிப்பதை மது அருந்துவதை நல்லது என்று கூறக்கூடியவர்கள் கூட இன்னும் நம்மிடையே இருக்கத்தான் செய்கின்றனர் ஆனால் அப்படிப்பட்டவர்கள் கூட சிலரை கண்டால் ஒழிக்கின்றனர் சிலருக்கு அல்லது அவர்கள் விரும்பக்கூடியவர்களுக்கு நாம் செய்யக்கூடிய இந்த காரியம் தெரியக்கூடாது என நினைக்கின்றனர் அதைத்தான் இஸ்லாமும் கூறுகின்றது.
நல்லவை மற்றும் பாவத்தைப் பற்றி நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு, ''நற்குணமும், நற்செய லும் நன்மையாகும். எது உன் உள்ளத்தில் நெருடலை ஏற்படுத்துமோ எதை மக்கள் அறிந்து கொள்வதை நீ விரும்ப மாட்டாயோ அதுவே பாவமாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என நவாஸ் இப்னு ஸம் ஆன்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
ஆக சகோதரர்களே இஸ்லாம் நற்குணத்தை முஸ்லிமின் தலையாய கடமையாக கருத வேண்டும் என போதிக்கின்றது நற்குணத்தின் மூலமாகத்தான் ஒரு முஸ்லிம் தன்னை மற்ற சமூகத்தாரிலிருந்து வேறுபடுத்தி காட்டமுடியும். எனவே அதை பேணி நடக்கக்கூடிய நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கியருள்வானாக ..!!

ஆபாசம் உருவாவது எங்கே?

ஆபாசம் என்பது மிகக் கொடிய ஒரு நோயாகும். அது வெகுவிரைவில் மனிதனின் சிந்தனையை ஆட்கொள்ளக்கூடிய ஒரு வைரஸாகும். ஆதமுடைய விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்ட பெண் சந்ததியில் கணிசமான மக்கட் தொகையை ஆட்கொண்டுவிட்ட இந்த நோய் எந்த அளவிற்கு பெண்களை பாதித்திருக்கின்றது என்றால், "எங்களுக்கு கர்ப்பப்பை சுதந்திரம் வேண்டுமெ"ன்று போராட்டங்கள் நடத்தக்கூடிய அளவிற்கு இந்த நோய் இன்று சமூகத்தில் வளர்ந்துவிட்டதை காண்கிறோம். இதனைக் குறித்து சமூகத்தில் நன்மையை விரும்பக்கூடியவர்கள் வேதனைப்பட வேண்டியுள்ளது.
மனித சமூகத்தை இப்புவியில் நிலைநிறுத்த காரணமான மிகவும் உயர்ந்த தாய்மை எனும் அந்தஸ்தில் உள்ள இந்த பெண் சமுதாயம், தன்னைப்பற்றியும் தன் குடும்பத்தைப்பற்றியும் சிந்திக்காமல், தான் வாழக்கூடிய சமூகத்தில் இவை எப்படிப்பட்ட சீரழிவை ஏற்படுத்தும் என்பதை உணராமல், ஏன் இப்படி தரம்கெட்டு போய்விட்டனர்? என்று வேதனைப்படும் நிலையில் இவர்களின் செயல்பாடுகள் உள்ளன. . அதுமட்டுமல்லாது இப்படிப்பட்ட சிந்தனையுள்ளவர்களை வைத்து ஆபாசப்படம் எடுத்து வயிறு பிழைத்துக் கொண்டிருக்கின்றது மற்றொரு கூட்டம்.
அந்தக் கூட்டத்தை வாழவைப்பதற்கு தன்னுடைய உடலையும், மானத்தையும், மரியாதையையும் ஏன் தாரை வார்க்கவேண்டும் என்றெல்லாம் சிந்திக்காமல் பெண்ணுரிமை என்ற பெயரில் கர்ப்பப்பை சுதந்திரம், உடை சுதந்திரம் என்றெல்லாம் யாரோ தூக்கத்தில் உளறியதை வேதவாக்காக நினைத்து அதற்கு பின்னால் கொடிபிடித்துக் கோண்டிருக்கிறது இந்த பெண்ணினம்! இதனால் அவர்கள் விரும்பும் சுதந்திரமும், கூடுதலாக அவர்களுக்கு உல்லாசமாக சுற்ற சிறிது பணமும் வேண்டுமானால் கிடைக்கலாம்; ஆனால் இந்த சமூகத்திற்கு நம்மிடமிருந்து கிடைக்கும் பாடம் என்ன? வருங்கால இளம் தலை முறையினருக்கு நாம் கொடுக்கும் படிப்பினை என்ன? என்பதை குறித்து இவர்கள் சிறிது சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
அன்னை தெரேஸாவுக்கோ, நமது மறைந்த பிரதமர் இந்திராகாந்திக்கோ உடை ஒரு பாதகமாக தோன்றவில்லை. அவர்களின் வளர்ச்சியில், அவர்களால் இந்த சமூகத்திற்கு கிடைத்த நன்மையின் அளவில் ஒரு கால் தூசு அளவு கூட ஆடை சுதந்திரத்தையும், கர்ப்பப்பை சுதந்திரத்தையும் கேட்கும் இப்பெண்களால் மனித சமுதாயம் பெறவில்லையே! பிறகு ஏன் உடைக்குப் பின்னால் படை? அது மட்டுமா? இதைப்பார்த்து இளைஞர்கள் கூட்டத்தில் ஒரு பெரும் பகுதி சமூகத்தில் எந்த ஒரு பிடிப்புமில்லாமல், எந்த ஒரு இலட்சியமுமில்லாமல் தாந்தோன்றித்தனமாக பெண்களின் பின்னால் அலைந்து கொண்டிருக்கின்றது. படைத்தவனுக்கு தெரியும் படைப்பின் லட்சணம். ஒரு சமூகத்தின் செயல்பாட்டினால் ஏற்படக்கூடிய வினையும் எதிர்வினையும் என்ன என்பதை படைத்தவன் மிகத் துல்லியமாகக் கணிக்கக்கூடியவன்.
பொதுவாக குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான கட்டளைகளையும் ஆலோசனைகளையும் கூறிச்சென்றாலும் இவ்விஷயத்தைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் கண்டிப்பாக பேணவேண்டிய கட்டாய கடமையாக சில கட்டளைகளை அறிவுரை வழங்குவது போல் கூறுகிறது. முஸ்லிம்களுக்கு இட்ட கட்டளையை முஸ்லிமல்லாதவர் கடைபிடிக்கவில்லை எனில் அவரை குற்றம் காண முடியாது(அவர் முஸ்லிமல்லாத காரணத்தினால்). ஆனால் முஸ்லிம் என்று தன்னை பறைசாற்றிக்கொண்டவர் கண்டிப்பாக குர்ஆனின் அனைத்து கட்டளைகளையும் அறிவுரைகளையும் கடைபிடித்தே தீரவேண்டும். இல்லையேல் இறைவன் முன் அவர் குற்றவாளியாகின்றார். இஸ்லாமிய சமுதாயத்தில் அவர் வெறுக்கத்தக்கவராகின்றார்-அவர் எவ்வளவு பெரிய அந்தஸ்தில் இருந்தாலும் சரியே.

I. முஸ்லிமிற்கான அறிவுரை வீட்டிலிருந்து ஆரம்பிக்கின்றது.
1. பெண்களுக்கான அறிவுரை
33:32. நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்லர். நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால் (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசங்கள்.

33:33. (நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள். முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்.

33:53 முற்றிலும் பரிசத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான். உண்மையைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை. நபியுடைய மனைவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால் திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களையும் அவர்கள் இருதயங்களையும் தூய்மையாக்கி வைக்கும்.

33:59. நபியே! நீர் உம் மனைவிகளுக்கும் உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக. அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.

2. குழந்தைகளுக்கான அறிவுரை

24:58.ஈமான் கொண்டவர்களே! உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்(அடிமை)களும் உங்களிலுள்ள பருவம் அடையாச் சிறுவர்களும் (உங்கள் முன் வர நினைத்தால்) மூன்று நேரங்களில் உங்களிடம் அனுமதி கோர வேண்டும்; ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நீங்கள் (மேல் மிச்சமான உங்கள் உடைகளைக் களைந்திருக்கும் 'ளுஹர் ' நேரத்திலும், இஷாத் தொழுகைக்குப் பின்னரும்-ஆக இம்மூன்று நேரங்களும் உங்களுக்காக (அமையப் பெற்றுள்ள) மூன்று அந்தரங்க வேளைகளாகும் - இவற்றைத் தவிர (மற்ற நேரங்களில் மேல்கூறிய அடிமைகளும் குழந்தைகளும் அனுமதியின்றியே உங்கள் முன் வருவது) உங்கள் மீதும் அவர்கள் மீதும் குற்றமில்லை.

3. இஸ்லாமிய சமூகத்திற்கான அறிவுரை

24:27.ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில் (வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் - (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும். நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது).

24:28.அதில் நீங்கள் எவரையும் காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் வரையில் அதில் பிரவேசிக்காதீர்கள்; அன்றியும் 'திரும்பிப் போய் விடுங்கள் ' என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால் அவ்வாறே திரும்பி விடுங்கள் - அதுவே உங்களுக்கு மிகவும் பரிசுத்தமானதாகும்; மேலும் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிபவன்.

மேற்கண்ட வசனங்கள் ஒரு பெண் தன் சமூகத்திற்கிடையே எவ்வாறு பழக வேண்டும், சமூகத்தில் உள்ளவர்கள் ஒரு பெண்ணை எப்படி அணுக வேண்டும், ஒரு குழந்தையை இஸ்லாமியன் எப்படி வளர்க்க வேண்டும் என்பனவற்றை அதன் தன்மைகளோடு அதனால் ஏற்படும் பாரதூரங்களோடு இஸ்லாம் எடுத்து வைக்கின்றது.

II. மனித சமூகத்திற்கு (முஸ்லிமல்லாதவர்களுக்கு) இஸ்லாம் கூறும் அறிவுரை

7:26. ஆதமுடைய மக்களே! மெய்யாகவே நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும் உங்களுக்கு அலங்காரமாகவும் ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (இறை பயபக்தி,) எனும் ஆடையே (அதைவிட) மேலானது. இது அல்லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும் - (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக.

17:32. நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள் நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும் (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.

இஸ்லாம் ஒரு தீமையைக் கண்டால் கண்ணை மூடி இருக்கவோ அல்லது அந்த இடத்தை விட்டு ஓடி ஒளியவோ கூறவில்லை. மாறாக அதை எதிர்த்துப் போராடப் பணிக்கிறது. அத்தீமையின் ஆணிவேர் எங்கே உள்ளது எனத்தேடி அதை வேரோடும் வேரடி மண்ணோடும் களைந்தெடுக்கக் கூறுகிறது.

உலகில் விபச்சாரமும் ஒழுக்கக்கேடுகளும் பெருகுவதற்கும் அதனால் எழும் சுகாதாரக் கேடுகளுக்கும் மூலக்காரணம் ஆபாசமே. இது இளைஞர் சமுதாயத்தை விரைவில் வீழ்த்தி ஒழுக்கக்கேட்டிற்கு இட்டுச்செல்கிறது. ஆடையைக் களைவதினாலும், ஆபாசமாக உடையணிவதினாலும் மனித சமூகத்திற்கு ஏற்படக்கூடிய தீமையை, சமூகத்தின் மீதும் வருங்கால சமுதாயத்தின் வளர்ச்சியின் மீதும் அக்கறையுள்ளவர்கள் சமூகத்தில் சுட்டிக்காட்டி அதனைக் கண்டிக்க கடமைப்பட்டுள்ளனர். ஆள்பாதி ஆடை பாதி; ஆடையில்லாதவன் அரை மனிதன் என்பார்கள். ஆடையென்பது ஒருவருக்கு கண்ணியத்தைத்தான் தருமேயல்லாது கேவலத்தை ஒருபோதும் தருவதில்லை - கேவலப்பட விரும்புபவர்களைத் தவிர….