சபைகளில் விசாலமாக இடமளியுங்கள் என்று கூறினால் அதற்கு செவிசாய்த்து இடமளிக்கவேண்டும். எழுந்து விடுங்கள் என்று கூறினால் எழுந்து விடவேண்டும். அல்லாஹ்விடம் அதற்கான நற்கூலிகள் உண்டு.
ஈமான் கொண்டவர்களே! சபைகளில் ''நகர்ந்து இடங்கொடுங்கள்'' என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால் நகர்ந்து இடம் கொடுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு இடங்கொடுப்பான்; தவிர, 'எழுந்திருங்கள்' என்று கூறப்பட்டால் உடனே எழுந்திருங்கள்; அன்றியும், உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்; கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் - அல்லாஹ்வோ நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். (58:11)
அல்லாஹ்வைப் புகழ்ந்து ஆரம்பிக்காத எந்தப்பேச்சும் குறையுடையதே. அபூஹுரைரா(ரலி) : அபூதாவூத், அஹ்மத்
சபைக்கு வரும் பொழுதும், போகும் பொழுதும் ஸலாம் சொல்ல வேண்டும்.
ஒரு சபைக்கு வருபவர் அங்கிருப்பவருக்கு ஸலாம் சொல்லட்டும். அங்கிருந்து செல்லும் போதும் அவர் ஸலாம் கூறட்டும் முந்தய (ஸலாம்) பிந்தயதைவிட சிறந்ததல்ல என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அபூதாவூத், திர்மிதி, அஹ்மத்
அவையில் வந்தமர்தல் எங்கே இடம் இருக்கிறதோ அங்கேதான் அமரவேண்டும்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தால் எங்கே இடம் இருக்கின்றதோ அங்கே அமர்ந்து கொள்வோம். முஸ்லிம், அபூதாவூத் : ஜாபிர் பின் ஸமுரா(ரலி)
ஒருவரை எழுப்பிவிட்டு அந்த இடத்தில் அமரக்கூடாது. ஒருவர் அமர்ந்திருந்த இடத்தில் தான் அமர்வதற்காக அவரை எழுப்பிவிடலாகாது. என்றாலும் நெருக்கமாக அமர்ந்து (அவருக்கு) இடம் கொடுங்கள், அல்லாஹ் உங்களுக்கு விசாலமாக்குவான் என்று நபி(ஸல்) கூறினார்கள். புகாரி, முஸ்லிம்: இப்னு உமர்(ரலி)
எழுந்து சென்றுவிட்டு திரும்பினால் அவர்தான் அவ்விடத்தில் (அமர்வதற்கு)அதிக உரிமை படைத்தவர் ஆவார். முஸ்லிம், அபூதாவூத், இப்னுமாஜா
சிறந்த சபை
அதிகம் பேரைக் கொள்ளக்கூடிய சபைதான் சபைகளில் மிகவும் சிறந்த சபையாகும். அபூஸயீத்(ரலி) : அபூதாவூத்
அவையில் அமர்வதின் ஒழுங்கு
சேர்ந்து அமர்ந்திருக்கும் இருவருக்கிடையில் போய் ஒருவர் அமரக்கூடாது. அபூதாவூத் : அம்ருபின் ஹுஐப்(ரலி)
வட்டமாக கூடியுள்ள ஒரு சபையின் நடுவில் உட்கார்பவனை நபி(ஸல்) அவர்கள் சபித்துள்ளனர். அபூதாவூத் : ஹுதைஃபா(ரலி)
அவைக்குச் சென்றால் நெருங்கி அமர்தல்
நபி(ஸல்) அவர்கள் மக்களுடன் பள்ளிவாயிலில் அமர்ந்து கொண்டிருந்த போது மூன்று பேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் இருவர் நபி(ஸல்) அவர்களை நோக்கி வந்தனர். மற்றொருவர் சென்றுவிட்டார். அவ்விருவரில் ஒருவர் வட்டமான அந்த சபையில் ஒரு இடை வெளியைக் கண்டபோது அதில் அமர்ந்து கொண்டார். மற்றவர் சபையின் பின்னால் அமர்ந்து கொண்டார். நபி(ஸல்) அவர்கள் உரையை முடித்ததும் இம் மூன்று பேர்களைப்பற்றி கூறட்டுமா என்று கேட்டார்கள். அவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் பக்கம் ஒதுங்கினார். அல்லாஹ்வும் அவரை அரவணைத்துக் கொண்டான். இரண்டாமவரே வெட்கப்பட்டுக் கொண்டு (கடைசியில் உட்கார்ந்து) விட்டார். எனவே அல்லாஹ்வும்; வெட்கப்பட்டுக் கொண்டான். மூன்றாமவரோ அலட்சியப்படுத்தி சென்று விட்டார் எனவே அல்லாஹ்வும் அவரை அலட்சியப்படுத்தி விட்டான் என்றார்கள்.
புகாரி: அபூவாக்கிதில் லைப்தி(ரலி)
முன் வரிசையில் அமர்வதற்காக மக்களுக்கு சிரமம் கொடுக்கக் கூடாது
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ பிரசங்கம் செய்துக் கொண்டிருக்கும் போது ஒரு மனிதர் மக்களை தாண்டிக் கொண்டு முன்னேறி சென்றார். அவரிடம் நபி(ஸல்) அவர்கள் உட்கார்வீராக மக்களுக்கு சிரமம் கொடுக்கிறீர்கள் மேலும் தாமதமாக வந்திருக்கின்றீர் என்றார்கள். அஹ்மத், அபூதாவூத், நஸயீ : அப்துல்லாஹ் பின் புஸ்ர்(ரலி)
முக்கிய காரணம் இருப்பின் மக்களை தாண்டிச் செல்லலாம்
நான் நபி(ஸல்)அவர்களின் பின்னால் மதீனாவில் அஸர் தொழுதேன். தொழுத பின் நபி(ஸல்)அவர்கள் எழுந்து விரைவாக மக்களை தாண்டி தனது மனைவியரின் இல்லங்களில் சிலவற்றிர்க்குச் சென்றார்கள். நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு செல்வதை கண்ட மக்கள் அஞ்சிவிட்டார்கள் நபி(ஸல்) அவர்கள் திரும்ப வந்து மக்கள் இவ்வாறு அஞ்சியிருப்பதையும் கண்டதும் என் வசம் சிறிது தங்கம் இருப்பது எனக்கு நினைவுக்கு வந்தது. அது என்னிடம் இருப்பதை வெறுத்தேன். ஆகவே அதை (தர்மமாக) விநியோகிக்குமாறு கட்டளையிட்டேன் (அதற்காக வீட்டிற்கு சென்றேன்) என்று கூறினார்கள். புகாரி, நஸயீ : உக்பா பின் அல்ஹாரித்(ரலி)
தூக்கம் வந்தால் இடம்மாறி அமரலாம்
பள்ளியில் இருக்கும் போது உங்களில் ஒருவர் தூக்கம் வருவதாக உணர்ந்தால் அவர் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர (மாறி அமர) வேண்டும். அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, பைஹகீ : இப்னு உமர்(ரலி)
உரைக்கிடையில் ஒருவர் குறிக்கிட்டால் உரை முடிந்தபின் பதிலளிக்கலாம்
ஒரு அவையில் நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருக்கும் போது ஒரு நாட்டுப்புறத்து அரபி வந்து மறுமை நாள் எப்போது? எனக்கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தமது உரையை தொடர்ந்தனர். பிறகு தமது உரையை முடித்துக் கொண்டு மறுமையைப் பற்றி கேட்டவர் எங்கே? என்று வினவினார்கள். பின்பு அவரிடம் அமானிதம் பாழ்படுத்தப்பட்டால் என்றார்கள். அதற்கவர் அது எவ்வாறு பாழ்படுத்தப்படும் என்றார். அதற்கு நபி(ஸல்) எந்தக்காரியமானாலும் அது தகுதியற்றவரிடம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும் என்றார்கள்.
புகாரி(ஹதீஸின் சுருக்கம்) : அபூஹுரைரா(ரலி)
சபை இறைவனின் கண்காணிப்பில் உள்ளதை உணர்தல்
சபை இறைவனின் கண்காணிப்பில்தான் இருக்கின்றது என்பதை உணர்ந்து இறைவனுக்குப் பொருத்தமான பேச்சையே பேசவேண்டும்.
நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலுள்ளவற்றையும் பூமியிலுள்ளவற்றையும் அறிகிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மூன்று பேர்களின் இரகசியத்தில் அவன் அவர்களில் நான்காவதாக இல்லாமலில்லை. இன்னும் ஐந்து போர்களி(ன் இரகசியத்தி)ல் அவன் ஆறாவதாக இல்லாமலில்லை. இன்னும் அதைவிட மிகக் குறைந்தோ, அதைவிட மிக அதிகமாகவோ, அவர்கள் எங்கிருந்தாலும் அவன் அவர்களுடன் இல்லாமலில்லை - அப்பால் கியாம நாளில் அவர்கள் செய்தவற்றைப் பற்றி அவர்களுக்கு அவன் அறிவிப்பான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களைப் பற்றியும் நன்கறிந்தவன். (58:7)
அல்லாஹ்விடம் நற்கூலியைப் பெற்றுத் தரும் சிறந்த ஆலோசனைகள்
(நபியே!) தர்மத்தையும், நன்மையானவற்றையும், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைப்பதையும் தவிர, அவர்களின் இரகசியப் பேச்சில் பெரும்பாலானவற்றில் எந்த விதமான நலமும் இல்லை. ஆகவே எவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இதைச் செய்கின்றாரோ, அவருக்கு நாம் மகத்தான நற்கூலியை வழங்குவோம். (4:114)
புறக்கணிக்கப்பட வேண்டிய சபை
(முஃமின்களே!) 'அல்லாஹ்வின் வசனங்கள் (சிலரால்)நிராகரிக்கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால், அவர்கள் இதைவிட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம் என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது (கட்டளை) இறக்கியுள்ளான். அவ்வாறு உட்கார்ந்தால் நீங்களும் அவர்களைப் போன்றவர்களே. நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்களையும், காஃபிர்களையும் நரகத்தில் ஒன்றாகச் சேர்த்துவிடுவான். (4:140)
(நபியே!) நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும்; (இக்கட்டளையைவிட்டு) ஷைத்தான் உம்மை மறக்கும்படிச் செய்துவிட்டால், நினைவு வந்ததும், அந்த அநியாயக்கார கூட்டத்தினருடன் நீர் அமர்ந்திருக்க வேண்டாம். (6:68)
அவையை முடிக்கும் போது
நபி(ஸல்) அவர்கள் அவையின் முடிவில் அங்கிருந்து எழ நாடினால்
''சுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக அஷ்ஹது அன்(ல்)லாயிலாஹ இல்லா அன்த அஸ்தஃபிருக வ அத்தூபு இலைக்க''
என்று கூறுவார்கள்.
அப்பொழுது ஒருவர் நபி(ஸல்)அவர்களிடம் யா ரஸுலுல்லாஹ் தாங்கள் (அவைமுடிவில்) இதற்கு முன் சொல்லாதவைகளை இப்பொழுது கூறினீர்கள் என்றார் அதற்கு நபி(ஸல்) இது அவையில் நிகழும் குற்றங்களுக்குப் பரிகாரம் ஆகும் என்றார்கள். அபூபரஜா(ரலி) : அபுதாவூத்
Friday, January 19, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment