நோன்பின் நேரம்
சுப்ஹுநேரம் வந்தது முதல் சூரியன் மறையும் வரை நோன்பின் நேரமாகும். அதாவது சுப்ஹுநேரம் துவங்கியது முதல் சூரியன் மறையும் வரை உண்ணாமல், பருகாமல், உடலுறவுகொள்ளாமல் இருந்து நோன்பை முழுமைப்படுத்த வேண்டும்.
பஜ்ரு எனும் வெள்ளை நூல் (இரவு எனும்) கறுப்பு நூலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள் (2:187)
இவ்வசனத்தில் பஜ்ரு வரை உண்ணலாம், பருகலாம் என்று இறைவன் அனுமதிக்கிறான். பஜ்ரிலிருந்து தான் நோன்பின் நேரம் ஆரம்பமாகிறது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். பின்னர் இரவு நோன்பை முழுமையாக்குங்கள். (2:187)
இரவு என்பது சூரியன் மறைந்தவுடன் ஆரம்பமாகிறது. எனவே சூரியன் மறைவது வரை உண்ணாமல் பருகாமல், இருக்க வேண்டியது அவசியம்.
ஹதிஸ்: இத்திசையிலிருந்து இரவு நம்மை நோக்கிவந்து அத்திசையில் பகல் பின்னோக்கிச் சென்று சூரியனும் மறைந்து விடுமானால் நோன்பாளி நோன்பு துறக்க வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். - இப்னு அபீ அவ்பா(ரலி) : முஸ்லிம்
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். சூரியன்; மறைந்தவுடன் ஒரு மனிதரிடம் ''போய் நமக்காக (நோன்பு துறக்க) மாவுக்கரைசலைக் கொண்டு வருவீராக'' என்றார்கள் அதற்கு அம்மனிதர் ''இன்னும் கொஞ்சம் மாலையாகட்டுமே'' என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''போய் மாவைக் கரைத்து எடுத்துவருவீராக'' என்றார்கள் இன்னும் பகல் நேரம் மிச்சமுள்ளதே என்று அவர் கூறிக் கொண்டே சென்று மாவைக் கரைத்து எடுத்துவந்தார். அதை நபி(ஸல்) அவர்கள் குடித்தார்கள். - இப்னு அபீ அவ்பா(ரலி): புகாரி, முஸ்லிம்
ஸஹர்(அதிகாலை) உணவு
நீங்கள் ஸஹர் நேரத்தில் உண்ணுங்கள் ஏனெனில் ஸஹர் நேர உணவில் பரகத்(புலனுக்குத் தெரியாத மறைமுகமான பேரருள்) உள்ளது, என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். - அனஸ்பின் மாலிக்(ரலி) : புகாரி, முஸ்லிம், நஸயீ, திர்மிதி
நமது நோன்புக்கும் வேதம் கொடுக்கப்பட்ட (யூத, கிருஸ்த்த)வர்களின் நோன்புக்கும் வித்தியாசம் ஸஹர் நேரத்தில் உண்பதாகும் எனவும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். - அம்ரு பின் அல்ஆஸ்(ரலி) : முஸ்லிம்
3.ஸஹர் உணவைத் தாமதப்படுத்தி நோன்பு துறப்பதை விரைவு படுத்தும் வரை மக்கள் நன்மையில் நீடித்துள்ளார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். - அபூதர்(ரலி) : அஹமத்
4.நாஙகள் நபி(ஸல்) அவர்களுடன் ஸஹர்செய்துவிட்டு (சுபுஹ்) தொழுகைக்கு ஆயுத்தமாவோம் என்று ஸைத் பின் ஸாபித்(ரலி) கூறினார்கள் (ஸஹருக்கும் சுபுஹுக்கும் இடையே) எவ்வளவு நேரம் இருக்கும் என்று அவர்களிடம் நான் கேட்டேன், அதற்கவர்கள் ஐம்பது வசனங்கள் ஓதும் நேரம் என விடையளித்தார்கள். - அனஸ்(ரலி) : புகாரி, திர்மிதி
நோன்பாளி மனதில் எண்ணிக்கொள்வது
அமல்களுக்கு கூலி கொடுக்கப்படுவது எண்ணங்களைப் பொறுத்துத்தான்; என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - உமர்(ரலி) : புகாரி
பஜ்ருக்கு முன்னால் யார் நிய்யத்து வைக்க(எண்ண)வில்லையோ அவருக்கு நோன்பு கிடையாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - திர்மிதி
நோன்பு திறப்பது
நோன்பு திறப்பதை (தாமதிக்காது) விரைவுபடுத்தும் காலம் வரைக்கும் என் உம்மத்து நலவிலேயே இருப்பார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - புகாரி
நானும் மஸ்ரூக் என்னும் நபித்தோழரும் ஆயிஷா(ரலி) அவர்களிடத்தில் சென்று முஃமின்களின் தாயே! நபி(ஸல்) அவர்களின் இருதோழர்கள் நன்மையைத் தேடும் விஷயத்தில் குறைவு செய்வதில்லை. ஒருவர் நோன்பு துறப்பதை அவசரப்படுத்தி நேரத்தோடு தொழுதும் விடுகின்றார், மற்றவர் நோன்பு திறப்பதை பிற்படுத்தி தொழுகையையும் பிற்படுத்துகின்றார், என்றார். யார் நோன்பு திறப்பதையும் தொழுகையையும் அவசரப்படத்துகின்றார்? என ஆயிஷா(ரலி) அவர்கள் கேட்டார்கள். அப்துல்லா இப்னு மஸ்ஊத்(ரலி) என்று நாங்கள் கூறினோம். அப்படித்தான் நபி(ஸல்) அவர்கள் செய்தார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள். - முஸ்லிம்
இன்னும் ஒரு அறிவிப்பில் மற்ற நபித்தோழர் அபூமூஸா அல் அஷ்அரி(ரலி) அவர்கள் என்று அறிவிக்கப்பட்டிரக்கிறது. - திர்மிதி
நோன்பு திறப்பதில் காலதாமதம் செய்யாதவர்கள் தான் எனக்கு விருப்பமான அடியார்கள் என்று அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூஹூரைரா(ரலி) : திர்மிதி
நோன்பு திறக்க ஏற்ற உணவு
1: யாருக்கு பேரீச்சம் பழம் கிடைக்கிறதோ அவர் அதன் மூலம் நோன்பு துறக்கட்டும். கிடைக்காதவர்கள் தண்ணீர் மூலம் நோன்பு திறக்கட்டும். ஏனெனில் அது தூய்மையானதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அனஸ் பின் மாலிக்(ரலி) : திர்மிதி, நஸயீ
2:நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்கு செல்வதற்கு முன் கனிந்த ஈத்தம் பழங்களைக் கொண்டு நோன்பு துறப்பார்கள். அது இல்லையென்றால் சாதாரண சில ஈத்தம் பழங்களைக் கொண்டு நோன்பு துறப்பார்கள், அதுவும் இல்லை யென்றால் சில மிடர் தண்ணீர் குடித்துக் கொள்வார்கள். - திர்மிதி
உங்களில் ஒருவர் நோன்பு துறந்தால் ஈத்தம் பழத்தைக் கொண்டு நோன்பு துறக்கட்டும், அது கிடைக்கவில்லை யென்றால் தண்ணீரைக் கொண்டு நோன்பு துறக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - திர்மிதி, அபூதாவூத்
நோன்பு துறந்து வயிறு குளிர்ந்த பின் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதமாக கேட்கும் ஒரு துஆவை நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். நோன்பு துறந்து முடிந்ததும் அதை ஓதிக்கொள்ள வேண்டும்.
துஆ ''தஹபள்ளமவு வப்தல்லதில் உரூகு, வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்'' என்று நபி(ஸல்) அவர்கள் ஓதுவார்கள்.இப்னு உமர்(ரலி) : அபூதாவூத்
நோன்பாளியின் பிரார்த்தனை
நோன்பாளி நோன்பு துறக்கும் போது கேட்கும் பிரார்த்தனை தட்டப்பட மாட்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - இப்னுமாஜா
நோன்பாளி நோன்பை துறக்கும் வரைக்கும், நீதியான அரசன், அனியாயம் செய்யப்பட்டவன், இம்மூவரின் பிரார்த்தனைகள் தட்டப்படுவதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - திர்மிதி
நோன்பு திறக்க வைப்(உணவளிப்)பதின் சிறப்புகள்
யார் ஒருவரை நோன்பு திறக்க வைக்கின்றாரோ அவருக்கு, நோன்பு நோற்றவர்க்கு கிடைக்கும் நன்மையைப் போன்று (ஒரு பங்கு) கிடைக்கும், ஆனால் நோன்பு நோற்றவரின் நன்மையில் எதுவும் குறையாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். திர்மிதி
தவிர்க்கவேண்டியவை
1: யார் கெட்ட பேச்சுக்களையும், செயல்களையும் விட்டுவிடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
2: எத்தனையோ நோன்பளிகள் அவர்கள் பசித்திருந்ததைத் தவிர வேறு எதையும் அவர்களின் நோன்பினால் பெற்றுக் கொள்வதில்லை. இன்னும் இரவில் நின்று வணங்கும் எத்தனையோ பேர் இரவில் கண் விழிப்பதைத் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்வதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்! (நஸயீ, இப்னு மாஜா)
3: உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் தன் மனைவியோடு உடல் உறவுக்கொள்ளக் கூடாது, இன்னும் கெட்ட வார்த்தைகள் பேசவும் கூடாது யாராவது அவரை ஏசினால் அல்லது அடித்தால் அவர் நோன்பாளி என்று கூறிக் கொள்ளட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - புகாரி, முஸ்லிம்
நோன்பை(வேண்டுமென்றே)முறிப்பதற்குரிய பரிகாரம்
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன் என்றார். என்ன அழிந்துவிட்டாய்? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ரமலானில் என் மனைவியுடன் உடலுறவு கொண்டுவிட்டேன் என்று அவர் கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''ஒரு அடிமையை விடுதலை செய்ய உம்மால் இயலுமா? என்க் கேட்டார்கள் அவர் இயலாது என்றார்;. அப்படியானால் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க இயலுமா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் இயலாது என்றார். அப்பபடியானால் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உம்மால் இயலுமா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள் அதற்கும் அவர் இயலாது என்றார். பின்னர் அந்கேயே (பள்ளியில்) அமர்ந்து விட்டார்.சற்று நேரத்தில் பேரிச்சம் பழம் நிரம்பிய கூடை ஒன்று நபி(ஸல்)அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அதை நபி(ஸல்) அவர்கள் அவரிடம் வழங்கி இதைத் தர்மம் செய்வீராக என்றார்கள். அதற்கவர் இந்த மதினாவுக்குள் எங்களைவிட ஏழை யாரும் இல்லையே என்றார் அதைக்கேட்ட நபி(ஸல்) அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரிய சிரித்தார்கள். இதை உமது குடும்பத்தாருக்கே வழங்குவீராக எனவும் கூறினார்கள். - அபுஹூரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம், நஸயி, திர்மிதி, அபுதாவுத்
அல்லாஹ் மிக்க அறிந்தவன்
Monday, September 01, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment