Wednesday, October 11, 2006

நோன்பின் ஒழுக்கங்கள்

ஃபஜ்ருக்கு சற்று முன்பு ஸஹர் உணவு உண்பதும் சூரியன் மறைந்த உடனே தாமதப்படுத்தாது நோன்பு திறப்பதும் சுன்னத்தாகும்.

பேரீத்தம் பழத்தைக் கொண்டு நோன்பு திறப்பது, அது கிடைக்கவில்லையெனில் தண்ணீரைக் கொண்டு நோன்பு திறப்பது சுன்னத்தாகும்.

ஸஹர் நேரத்தில் தாமதாமாக எழுந்து ஃபஜ்ருடைய நேரம் வந்து விட்டது என தெரிந்தும் விடி ஸஹர் என்ற பெயரில் எதையேனும் உண்பது தவறாகும். ஃபஜ்ர் நேரம் வந்துவிட்டால் எதையும் உண்ணக்கூடாது. இது போன்ற நிலைகளில் ஸஹர் செய்யாமலேயே நோன்பு நோற்க வேண்டும்.

ஹலாலான உணவையே உட்கொள்ள வேண்டும். இதை எல்லாக் காலங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும்.

நோன்பாளி அதிகமான வணக்க வழிபாடுகளில் ஈடுபடவேண்டும். அல்லாஹ் தடுத்தவைகளை விட்டும் முழுமையாகத் தவிர்ந்து கொள்ளவேண்டும் பொய், புறம், கோள் சொல்லுதல். ஏமாற்றுதல், ஹராமான வழியில் பொருளீட்டல் போன்ற தவறான அனைத்து சொல் செயல்களை விட்டும் தவிர்ந்திருத்தல் கட்டாய கடமையாகும்.

கடைசிப் பத்து நாட்களில் அதிலும் குறிப்பாக ஓற்றைப்படை இரவுகள் அனைத்திலும் இரவு முழுவதும் வணக்க வழிபாட்டில் ஈடுபட்டு லைலத்துல் கத்ர் இரவைத் தேடிக் கொள்ள வேண்டும்.

பெருநாள் தொழுகைக்கு முன்பு (ஜகாத்துல் ஃபித்ர்) எனும் பெருநாள் தருமத்தை முறையாகக் கொடுக்க வேண்டும்.

மற்றவர்களுக்காக நோன்பு நோற்பது

1. நோன்பு களாவாகவுள்ள நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் அவருக்காக அவரது பொருப்பாளர் நோன்பு நோற்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி

2. ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அல்லாஹ்வின் தூதரே என் தாய்மீது ஒரு மாத நோன்பு (கடமையாக) உள்ள நிலையில் மரணித்து விட்டார்.அவரது சார்பில் நான் அதை நிறைவேற்றலாமா? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ஆம் நிறைவேற்றலாம். அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்பட அதிகம் தகுதியானது என்று கூறினார்கள். - இப்னு அப்பாஸ்(ரலி) : புகாரி

ரமலான் இரவு வணக்கங்கள்

1. ரமலானில் நபி(ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது? என்று அயிஷா(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன் அதற்கு அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் ரமலானிலும் ரமலான் அல்லாத மாதங்களிலும் நபி(ஸல்) அவர்கள் பதினொரு ரக்அத்களுக்கு மேல் தொழுததில்லை, நான்கு ரக அத்துகள் தொழுவாhகள் அதன் அழகையும் நீளத்தையும் கேட்க்க வேண்டாம் பின்னர் நான்கு ரக அத்துகள் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் கேட்க்க வேண்டாம் பின்னர் மூன்று ரக அத்துகள் தொழுவார்கள் என்று விடையளித்தார்கள். - அபூஸலமா(ரலி) : புகாரி, முஸ்லிம், திர்மிதி

மேற் கண்ட ஹதீஸின் மூலம் இரவுத் தொழுகையை நான்கு நான்காகத்தான் தொழ வேண்டும் என்றல்லவா விளங்க முடிகிறது. அப்படியானால் நாம் இரண்டிரண்டாக தொழுவது சரியா? சரிதான் அதற்கான ஆதாரம்

2. இஷாவை முடித்ததிலிருந்து சுப்ஹூ(ஃபஜ்ர்)வரை நபி(ஸல்) அவர்கள் பதினொரு ரக அத்துகள் தொழுவார்கள் ஒவ்வொரு இரண்டு ரக அத்துகளுக்குமிடையே ஸலாம் கொடுப்பார்கள். - ஆயிஷா(ரலி) : இப்னு மாஜா.

3.நபி(ஸல்) அவர்கள் நள்ளிரவில் பள்ளிக்குச் சென்றுத் தொழுதார்கள் அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள் விடிந்ததும் மக்கள் இதுபற்றிப்;; பேசிக்கொண்டார்கள் (மறு நாள்) முதல் நாளை விட அதிகமான மக்கள் திரண்டு நபி(ஸல்) அவர்களின் பின்னால் நின்று தொழுதார்கள் விடிந்ததும் மக்கள் இதுபற்றிப் பேசிக் கொண்டார்கள் மூன்றாம் இரவில் பள்ளி வாசலுக்கு நிறைய பேர் வந்தனர். நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்து தொழுதார்கள் அவாகளைப் பின் பற்றி மக்களும் தொழுதனர். நான்காம் இரவு பள்ளிவாசல் கொள்ளாத அளவுக்கு மக்கள் திரண்டனர். ஆனால் நபி(ஸல்) அவர்கள் சுப்ஹூ தொழுகைக்குத்தான் பள்ளி வாசலுக்கு வந்தார்கள். சுப்ஹூ தொழுகையை முடித்ததும் மக்களை நோக்கி நான் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து கூறுகிறேன் நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமலில்லை எனினும் இது உங்கள் மீது கடமையாக்கப்பட்டு அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடுமோ என்று அஞ்சுகிறேன் எனவேதான் நான் தொழுவிக்க வரவில்லை என்று கூறினார்கள். - ஆயிஷா(ரலி) - புகாரி.

மூன்று நபர்களுக்கு மேல் நாம் ஜமாத்தாக தொழலாமா? தொழலாம். ஆதாரம் என்ன?

4. ரமலானில் மக்கள் (தனித்தனி) குழக்களாகத் தொழுது வந்தனர் குர்ஆனில் சிறிதளவு மனனம் செய்திருந்த ஒருவரைப் பின்பற்றி ஐந்து நபர்கள் அல்லது ஏழு நபர்கள் அல்லது அதைவிடக் குறைந்த எண்ணிக்கையினர் அல்லது அதைவிட அதிக எண்ணிக்கையினர் தொழுது வந்தனர். - ஆயிஷா(ரலி) : அஹ்மத்.

5.நபி(ஸல்) அவர்கள் காலத்தில் (மக்கள்)சிறு சிறு ஜமாஅத்தாக தொழுது வந்தனர் இதனை நபி(ஸல்) அவர்கள் அங்கீகரித்தார்கள். - ஆயிஷா(ரலி) : அஹ்மத்.

தராவீஹ் என்ற பெயரில் 20 ரக்அத்துகள் தொழும் வழக்கம் பரவலாகவுள்ளது. இதிpல் ஆச்சர்யமான விஷயம் என்ன வென்றால் திருகுர்ஆனிலோ, (பல்லாயிரக் கணக்கான ஹதீஸ்கள் இருந்தும்);, ஒரே ஒரு ஹதீஸிலோ, கூட தராவீஹ் என்ற வார்த்தையே இடம் பெறவில்லை.

நபி(ஸல்) அவர்கள் ரமலானிலும், ரமலான் அல்லாத மாதங்களிலும் தொழுத தொழுகை தஹஜ்ஜத் இரவுத் தொழுகை என்றுதான் குறிப்பிடப்படுள்ளது.

லைலத்துல் கத்ர்

இந்தத் திருக்குர்ஆனை மகத்துவமிக்;க ஓர் இரவில் நாம் அருளியுள்ளோம். மகத்துவமிக்க இரவைப்பற்றி உமக்கு தெரியுமா? அந்த மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்ததாகும் (97:1-5)

லைலத்துல் கத்ரை ரமளானின் கடைசிப்பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் நீங்கள் தேடுங்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி

நபி(ஸல்) அவர்கள் மக்களிடம் வந்தார்கள் அப்போது இரண்டு மனிதர்கள் வழக்காடிக் கொண்டிருந்தனர். அவ்விருவருடனும் ஷைத்தான் இருந்தான். எனவே அதை நான் மறந்துவிட்டேன். எனவே அதைக் கடைசிப்பத்து நாட்களில் தேடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூஸயீத்(ரலி) : முஸ்லிம், அஹமத்

அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமலான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ அவரின் முன்சென்றப் பாவங்கள் மன்னிக்கப்படும். லைலத்துல் கத்ரில் அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்த வராகவும் யார் நின்று வணங்குகின்றாரோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - புகாரி

ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப்படை நாட்களில் லைலத்துல் கத்ரின் இரவை தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - புகாரி

நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலத்துல் கத்ரை அறிவித்துக் கொடுப்பதற்காக வெளியில் வந்தார்கள், அப்போது இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டார்கள், அப்போது நபி(ஸல்) கூறினார்கள், லைலத்துல் கத்ரை உங்களுக்கு அறிவித்து கொடுப்பதற்காக நான் வெளியாகி வந்தேன் இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டதின் காரணமாக அல்லாஹ் அதைப்பற்றிய செய்தியை உயர்த்தி விட்டான் என்று கூறி அது உங்களுக்கு நலவாக இருக்கக் கூடும் என்றார்கள். ஆகவே அதை இருபத்தி ஜந்து, இருபத்தி எழு, இருபத்தி ஒன்பது ஆகிய நாட்களில் தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - புகாரி

7. (ரமலானின் கடைசிப்) பத்து நாட்கள் வந்து விட்டால் நபி(ஸல்)அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்தித் கொள்வார்கள்.இரவை (அல்லாஹ்வை வணங்கி) உயிர்ப்பிப்பார்கள். (இறைவனை வணங்குவதற்காகத்)தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள்;. ஆயிஷா(ரலி)புகாரி.

8.அல்லாஹ்வின் தூதரே லைலத்துல் கத்ரின் இரவை நான் அறிந்து கொண்டால் அதில் என்ன கூற வேண்டும் என்று கேட்டேன்? இவ்வாறு கூறுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹும்ம இன்னக்க அஃப்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஉஃபுஅன்னீ. - ஆயிஷா(ரலி): திர்மிதி

இஃதிகாஃப்

...நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்-இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்; அந்த வரம்புகளை(த்தாண்ட) முற்படாதீர்கள்; இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான். (2:187)

நபி(ஸல்) அவர்கள் ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் அவர்கள் மரணிக்கும் வரை இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்க நாடினால் சுப்ஹுதொழுது விட்டு தமது இஃதிகாஃப் இருக்குமிடம் சென்று விடுவார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்,நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா

ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுமாறு நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதை முன்பே நாம் அறிந்தோம். எனவே பஜ்ரு தொழுதவுடன் இஃதிகாஃப் இருக்கத்துவங்குவார்கள் என்பது 21 ஆம் நாள் ஃபஜ்ராக இருக்க முடியாது அப்படி இருந்தால் அந்த இரவு அவர்களுக்குத் தவறிப்போயிருக்கும். 20ம் நாள் பஜ்ரு தொழுதுவிட்டு இஃதிகாப் இருப்பார்கள் என்று விளங்குவதே சரியானது.

ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தில் நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருப்பார்கள். - அபூஹுரைரா(ரலி) : புகாரி

நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரைக்கும் ரமலான் மாதத்தின் கடைசிப்பத்தில் இஃதிகாஃப் இருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் மரணித்த பிறகு அவர்களின் மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். - புகாரி

நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமலான் மாதமும் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருப்பார்கள், மரணித்த வருடத்திpல் இருபது நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்.- அபூஹுரைரா(ரலி) : புகாரி

(நோன்பின்) கடைசிப்பத்து வந்து விட்டால் நபி(ஸல்) அவர்கள் இரவெல்லாம் விழித்திருந்து அமல் செய்வார்கள், தன் குடும்பத்தையும் அமல்செய்வதற்காக எழுப்பிவிடுவார்கள், தன் மனைவிமார்களிடமிருந்து தூரமாகி விடுவார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம்

நபி(ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்கும் போது மனிதனின் அவசியத்தேவை (மலஜலம் கழித்தல்)க்காகத் தவிர வீட்டிற்குச் செல்லமாட்டார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

நபி(ஸல்) அவர்கள் பள்ளியில் இஃதிகாஃப் இருக்கும் போது நான் வீட்டில் மாதவிடாயாக இருந்து கொண்டே அவர்களது தலையை வாரிவிடுவேன். அவர்கள் தமது தலையை(மட்டும்) வீட்டிற்குள் நீட்டுவார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். இரவில் அவர்களைச் சந்திக்க நான் சென்றேன். அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். பின்னர் நான் புறப்படுவதற்காக எழுந்தேன், என்னை வீட்டில் விடுவதற்காக அவர்களும் எழுந்தார்கள். - ஸபிpய்யா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

இஃதிகாஃப் இருப்பவர் நோயாளியை விசாரிக்காமலிருப்பதும், ஜனாஸாவில் பங்கெடுக்காமலிருப்பதும், மனைவியைத் தீண்டாலும் அணைக்காலிருப்பதும், அவசியத் தேவையை முன்னிட்டே தவிர வெளியே செல்லாமலிருப்பதும் நபிவழியாகும். - ஆயிஷா(ரலி) : அபூதாவூத்

பெண்களும் இஃதிகாஃப் இருக்கலாம்

முஃமின்களின் தாயான ஒருவர் உதிரப் போக்கு உள்ள நிலையிலும் (மாதவிலக்கு அல்ல) இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி

இஃதிகாஃபின் முடிவு

நபி(ஸல்) அவர்கள் (ஈதுல் ஃபித்ர்)பெருநாளன்று (காலை) உணவு உண்டு பெருநாள் தொழகை முடிக்காதவரை (இஃதிகாஃபை விட்டு) வெளியேற மாட்டார்கள். - புரைதா(ரலி) : திர்மிதி, ஹாகிம், அஹ்மத்.

(ஜகாத்துல் ஃபித்ர்)கட்டாயக் கடமை

அடிமைகள், சுதந்திரமானவர்கள், ஆண்கள், பெண்கள். சிறியோர், பெரியோர் ஆகிய அனைத்து முஸ்லிம்கள் மீதும் நோன்புப் பொருநாள் தர்மத்தை நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். பேரீச்சம் பழம், தீட்டப்படாத கோதுமை, ஆகியவற்றிலிருந்து ஒரு ஸாவு எனவும் அவர்கள் நிர்ணயித்தார்கள். மேலும் (பெருநாள்) தொழுகைக்கு மக்கள் புறப்படுவதற்கு முன்பே அதை வழங்கிவிட வேண்டும் எனவும் கட்டளையிட்டார்கள். - இப்னு உமர்(ரலி) : புகாரி, முஸ்லிம்

நபி(ஸல்) அவர்கள் அழைப்பாளர்களை மக்காவின் தெருக்களுக்கு அனுப்பி தெரிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஜகாத்துல் ஃபிதர் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும் என்ற வாசகத்தை சொல்லச் சொன்னார்கள். - அம்ர் பின் ஷூஐப் (ரலி) : திர்மிதி

ஜகாத்துல் ஃபித்ர் கொடுக்கவேண்டிய காலம்

நபித் தோழர்கள் நோன்புப் பெருநாளைக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னதாக அதை(ஜகாத்துல் ஃபித்ரை)க் கொடுத்து வந்தனர். - இப்னு உமர்(ரலி) : புகாரி

நோன்பு நோற்றவர் வீணான காரியங்களில் ஈடுபட்டதற்குப் பரிகாரமாகவும், ஏழைகளுக்கு உணவாகவும் இருக்கும் பொருட்டு நோன்புப் பெருநாள் தர்மத்தை நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். யார் (பொருநாள்) தொழுகைக்கு முன்பு அதை நிறைவேற்றுகிறாரோ அது ஏற்கப்பட்ட கடமையான ஜகாதுல்ஃபித்ராhக அமையும், யார் பெருநாள் தொழுகைக்குப் பின் வழங்குகிறாரோ அது சாதாரண தர்மங்களில் ஒரு தர்மம் போல் அமையும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - இப்னு அப்பாஸ்(ரலி) : அபூதாவூத்

ரமலான் இறுதியில் உங்கள் நோன்பு தர்மத்தை கொடுத்து விடுங்கள் எனக்கூறி இத்தருமத்தை நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். - இப்னு அப்பாஸ்(ரலி) : அபூதாவூத், நஸயீ

ஜகாத்துல் ஃபித்ரின் (பொருள்) அளவு

பேரித்தம் பழம் கோதுமை ஆகியவற்றிலிருந்து பெருநாள் தர்மம் ஒரு ஸாவு என்று நபி(ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தார்கள். - இப்னு உமர்(ரலி) : பைஹகி, தாரகுத்னி

ஒரு ஸாவு என்பது இரு கைகள் நிறைய நான்கு முறை அள்ளினால் எவ்வளவு இருக்குமோ அந்த அளவாகும்.

(ஜகாத்துல் பித்ர்) கொடுக்க வேண்டிய பொருள்

நாங்கள் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் உணவுப்பொருட்களில் ஒரு ஸாவு ஃபித்ரா தர்மம் வழங்குவோம் அன்றைய தினங்களில் எங்களின் உணவாக கோதுமையும, உலர்ந்த திராட்சையும் இருந்தது. அபூஸயீத்(ரலி)புகாரி

ஷவ்வால் (ஆறு)நோன்பு

யார் ரமலான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதம் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோன்பு நோற்றவராவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். - அபு அய்யுப்அல் அன்சாரி (ரலி) : முஸ்லிம், அபுதாவுத், திர்மிதி, இப்னு மாஜா

விடுபட்ட(களா)நோன்பு

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருக்கும்போது எங்களுக்கு மாதவிடாய் எற்பட்டு தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பைக் களா செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகை களைக் களாச்செய்யுமாறு கட்டளையிடமாட்டார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம்.

எனக்கு ரமலானில் சில நோன்புகள் விடுபட்டுவிடும். அதை ஷஃபான் மாதத்தில் தவிர என்னால் நிறைவேற்ற முடியாது. - ஆயிஷா(ரலி) : புகாரி

நபி(ஸல்) அவர்களுக்கு ஆயிஷா(ரலி) அவர்கள் பணிவிடை செய்ததே இதற்குக் காரணம் என்று யஹ்யா கூறுகிறார்.

இறந்தவர்களுக்காக நோன்பு வைத்தல்

அல்லாஹ்வின் தூதரே! என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையாக இருந்த நிலையில் இறந்து விட்டார் அவர்களுக்காக நான் அதை நிறைவேற்றலாமா? ஏன்று ஒருவர் கேட்டார். உனது தாய்க்கு (மற்ற)கடன்கள் இருந்தால் நிறைவேற்றத்தானே செய்வாய் என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள் அதற்கு அவர் ஆம் என்றார். அப்படியானால் நிiறைவேற்றப்பட அதிகம் தகுதி வாய்ந்தது அல்லாஹ்வின் கடனா(நோன்பா)கும். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - இப்னு அப்பாஸ்(ரலி) : புகரி, முஸ்லிம்.

ஏவரேனும் தன் மீது நோன்பு கடமையாக இருக்கும் நிலையில் மரணித்து விட்டால் அவருக்காக அவரது பொருப்பாளி (வாரிசுதாரர்) நோன்பு வைப்பார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம்

3 comments:

Jafar ali said...

அல்லாஹ் உங்களுக்கு நிரப்பமான கூலியை கொடுப்பானாக!

அபூ முஹை said...

புனித ரமளான் மாதம் உண்ணா நோன்பு சட்டங்களை தொகுத்து வழங்கிய உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!

அன்புடன்,
அபூ முஹை

அபூ ஸாலிஹா said...

அவசியமான நோன்பு நேரத்தில் அமைந்த அழகிய கருத்துக்கள்!

இதனைப் படித்து பின்பற்றும் ஒவ்வொருவருக்கும், தொகுத்து எழுதிய உங்களுக்கும் இறைவனின் நற்கூலி உண்டாகட்டுமாக!