Friday, October 13, 2006

நோன்பை முறிப்பவை மற்றும் அனுமதித்தவை

சுபுஹ் முதல் மஃரிப்வரை உண்ணாமல் இருப்பது பருகாமல் இருப்பது, இல்லறத்தில் ஈடுபடாமல் இருப்பது ஆகிய கட்டுப்பாடுதான் நோன்பு எனப்படுகிறது. நோன்பாளிகளுக்கு இம்மூன்றைத் தவிர வேறு எதையும் செய்யக் கூடாது என்று தடை இல்லை. இம்மூன்று காரியங்களில் எதைச் செய்தாலும் நோன்பு முறிந்து விடும்.

சாப்பிடுதல், குடித்தல், போன்றவற்றால் (அவைகள் உடலுக்கு பயன்தராத புகைபிடித்தல் போன்றவையாக இருந்தாலும் சரியோ) நோன்பு முறிந்துவிடும்.

முத்தமிடுதல், அணைத்தல், சுய இன்பம் போன்றவற்றால் இந்திரியம் வெளியானால் நோன்பு முறிந்துவிடும், தூக்கத்தில் தானாகவே இந்திரியம் வெளியானால் நோன்பு முறியாது.

வேண்டுமென்றே வாந்தி எடுத்தால் நோன்பு முறிந்து விடும். தானாகவே வாந்தி வந்தால் நோன்பு முறியாது.

உணவைப் போன்று சக்தியூட்டக்கூடிய வற்றை (மருந்து, குளுக்கோஸ், போன்றவைகளை) ஊசி போன்றவற்றின் மூலம் உடலுக்கு செலுத்தினால் நோன்பு முறிந்து விடும்.

மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தம் வெளிப்பட்டால் நோன்பு முறிந்து விடும்.

அனுமதிக்கப் பட்டவைகள்

மறதியாகச் செய்தல்

ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது மறதியாக சாப்பிட்டாலோ, பருகினாலோ அவர் தனது நோன்பை முழுமையாக்கட்டும்! ஏனெனில், அவருக்கு அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் அளித்துள்ளான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா

மனைவியுடன் நோன்பாளி நெருக்கமாக இருப்பது

1.நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது தம் மனைவியரை முத்தமிடுவார்கள். கட்டியணைப்பார்கள் அவர்கள் தம் உணர்வுகளை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக இருந்தார்கள்! - இப்னுமாஜா : ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ

2. நோன்பாளி (தம் மனைவியை) கட்டியணைப்பது பற்றி ஒரு மனிதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் கேட்டார் அவருக்கு அனுமதி அளித்தார்கள். மற்றொருவர் வந்து கேட்டபோது அவருக்கு அனுமதி மறுத்தார்கள். அனுமதி வழங்கப்பட்டவர் முதியவராகவும், அனுமதி மறுக்கப்பட்டவர் இளைஞராகவும் இருந்தனர். - அபுஹூரைரா(ரலி) : ஆபுதாவுத்

குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்பது

ரமலான் மாதத்தில் நபி(ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையானவர்களாக சுப்ஹு நேரத்தை அடைவார்கள் (அந்த நிலையில்) நோன்பும் நோற்பார்கள். - உம்மு ஸலாமா(ரலி) , ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

நோன்பு வைத்துக் கொண்டே குளிக்கலாம்

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது வெப்பத்தின் காரணமாக தமது தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்ததை நான் பார்த்துள்ளேன் என்று நபித்தோழர் ஒருவர் அறிவிக்கிறார். - அஹ்மத், அபூதாவூத், நஸயீ

நோன்பு நோற்றவர் பல் துலக்குதல்

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது எண்ணிச் சொல்லமுடியாத தடவை பல் துலக்கியதை நான் பார்த்துள்ளேன். - ஆமிர் பின் ரபீஆ(ரலி) : அபூதாவூத், திர்மிதீ

உணவுகளை ருசி பார்ப்பது

உணவு சமைக்கும் போது போதுமான அளவு உப்பு மற்றும் காரம் உள்ளதா? என்பதை அறிய நாக்கில் வைத்துப் பார்ப்பதில் தவறேதும் இல்லை. உள்ளே விழுங்கி விடாமல் ருசி பார்க்கலாம். இப்னு உமர்(ரலி) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது துணியைத் தண்ணீரில் நனைத்துத் தன் மீது போட்டுக் கொள்வார்கள்.

சமைக்கப்பட்ட உணவை ருசி பார்ப்பது தவறில்லை என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்கள்.

வாய் கொப்பளிப்பதும், உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதும் தவறில்லை என்று ஹஸன் பஸரி (ரலி) கூறினார்.

உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் காலையில் தலைக்கு எண்ணெய் தேய்த்து தலை வாரிக் கொண்டு வெளியே வரட்டும் என்று இப்னு மஸ்வூத்(ரலி) கூறுகிறார்கள்.

என்னிடம் கல்லால் ஆன தண்ணீர்த் தொட்டி உள்ளது. நோன்பு வைத்துக் கொண்டு அதில் மூழ்கிக் குளிப்பேன் என்று அனஸ்(ரலி) கூறியுள்ளார்கள்!

பச்சையான குச்சியால் பல்துலக்குவது குற்றமில்லை என்று இப்னு சீரீன் கூறினார், அதற்கு ருசி இருக்கிறதே என்று ஒருவர் கேட்டார். அதற்கவர்கள், தண்ணீருக்கும் தான் ருசி உள்ளது ஏன் வாய் கொப்பளிக்கிறாய்? என்று திருப்பிக் கேட்டார்கள். - புகாரி

இந்த காரியங்கள் நோன்புக்கு எதிரானது என்ற கருத்து பிற்காலத்தில் உருவானது என்பதற்கு புகாரியில் இடம் பெற்ற இந்தச் செய்திகள் ஆதாரமாகவுள்ளன.

நோன்பின் போது காயங்களுக்கு மருந்து போடுதல், பல்பிடுங்குதல், கண், காதுகளுக்கு சொட்டு மருந்திடுதல் போன்ற வற்றிற்கு அனுமதியுள்ளது.

நோன்பு நாட்களின் பகல் பொழுதில் பல்துலக்குவது தவறில்லை. மாறாக அது நோன்பல்லாத நாட்களிpல் சுன்னதாக இருப்பது போன்றே நோன்பு நாட்களிலும் சுன்னதாகும்.

குளிப்பு கடமையான நிலையில் ஸஹர் செய்வதில் தவறில்லை. சுப்ஹுதொழுகைக்காக குளித்துக் கொண்டாலே போதுமானது.

கடும் வெயிலின் காரணமாக குளிர்ந்த நீரை உடலில் ஊற்றிக் கொள்வதோ, பகல் மற்றும் மாலை பொழுதில் குளித்துக் கொள்வதோ தவறில்;;;லை.

நோன்பு திறக்க எதுவும் கிடைக்காவிட்டால் நோன்பு திறக்கும் நேரத்தில், நோன்பு திறப்பதாக எண்ணிக் கொள்ள வேண்டும். பிறகு வாயப்;புக் கிடைக்கும் போது சாப்பிட்டுக் கொண்டால் போதுமானது.

வாய் கொப்பளிக்கும் போது தன்னை அறியாது தண்ணீர் தொண்டையில் இறங்கிவிட்டால் நோன்பு முறியாது. ஆனால் அடித்தொண்டை வரை தண்ணீரை செலுத்தாமல் இருக்க வேண்டும்.

நேரம் தெரியாது சூரியன் மறைந்து விட்டது என்று நினைத்து, சூரியன் மறைவதற்கு முன்னரோ, அல்லது ஃபஜ்ர் நேரம் வரவில்லை என்று நினைத்து ஃபஜ்ர் நேரம் நேரம் வந்ததற்கு பிறகு சாப்பிட்டுவிட்டாலோ நோன்பு முறியாது. எனினும் சரியான நேரம் தெரிந்து விட்டால் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்.

காயங்கள் சிறு(கிளி) மூக்கு உடைதல், பல் பிடுங்குதல் போன்றவற்றால் இரத்தம் வெளியானால் நோன்பு முறியாது. மறந்து அல்லது தெரியாமல் சாப்பிட்டோ, குடித்தோவிட்டால் நோன்பு முறியாது, ஆனால் நோன்பின் நினைவு வந்தவுடனே நிறுத்தி கொள்ளவேண்டும்.

No comments: